கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்துக்கு உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு முறையாவது விஜயம் செய்து ரசிக்க வேண்டும். அரபிக்கடல் ஓரம் வீற்றிருக்கும் இந்த கம்பீரமான நகரம் ஒரு காலத்தில் இந்தியாவில் முக்கியமான துறைமுக நகரமாக திகழ்ந்திருக்கிறது.
கொச்சின் என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட இந்த கடற்கரை நகரம் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ‘கொச்சு அழி’ எனும் மலையாள மொழிச்சொல்லிலிருந்து இந்த கொச்சி எனும் பெயர் பிறந்துள்ளது.
அதாவது, ஒரு சிறிய தீவு என்பது அதன் பொருளாகும். பண்டைய கால யாத்ரீகர்களின் வரலாற்றுக் குறிப்புகளில் கொச்சி நகரம் தவறாமல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்போதைய பயணிகளின் முக்கிய விஜய ஸ்தலமாகவும் இது திகழ்ந்திருக்கிறது.
மேலும், பல போர்த்துகீசியர்கள் கொச்சியில் தங்கள் வாழ்க்கையின் வேர்களைக் பெற்று இந்த நகரை சொந்த ஊராகவே கருதுவது ஒரு வியக்கத்தக்க உண்மையாகும். மேலும், வரலாற்றுக்காலத்தில் மட்டுமன்றி, இன்றும் கொச்சி உலகளாவிய அளவில் சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படும் நகரமாக புகழ்பெற்று விளங்குகிறது.
மக்களின் தேவைக்கேற்ப, நவீனம் மற்றும் பாரம்பரியம் இரண்டுமே கலந்து இந்த நகரம் காட்சியளிக்கிறது. மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இந்திய மரபு ஆகியவற்றின் சீரான பிணைப்பு இந்நகரத்திற்கு ஒரு உன்னதமான அடையாளத்தை தந்திருக்கிறது.
செழுமையான வரலாற்றுப்பின்னணி
ரசனையில் வேறுபட்ட ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்று கொச்சியில் இருக்கிறது. இருப்பினும், வரலாற்றுப்பிரியர்களின் சொர்க்கம் கொச்சி என்று பொதுவாக சொல்லலாம்.
அந்த அளவுக்கு இதன் வரலாற்றுப்பின்னணி முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. 14ம் நூற்றாண்டிலிருந்து இதன் சிறப்பு பரவத்தொடங்கியுள்ளது. அதன் பின்னர் பல யாத்ரீகர்களின் பயணக்குறிப்புகளில் இந்த துறைமுக நகரம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
முக்கியமாக வாசனைப்பொருட்கள் மற்றும் மூலிகைப்பொருட்கள் போன்ற பொருட்களின் வணிக மையமாக இது திகழ்ந்துள்ளது. யூதர்கள், சீனர்கள், போர்ச்சுகீசியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகியோர் கடல் கடந்து வந்து இங்கு வாசனை மூலிகைப்பொருட்களை கொள்முதல் செய்வதிலும் அவர்கள் கொண்டுவந்த பொருள்களை விற்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.
இப்படி பல காலமாக பல நாகரிகங்களைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தமையால் இந்நகரம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை நாளடைவில் தன்னுடைய அடையாளமாக உருவாக்கிக்கொண்டுவிட்டது.
உணவுப்பிரியர்களின் சொர்க்கம்
கொச்சிக்கு விஜயம் செய்யும் பயணிகளை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு விஷயம் இங்கு காணப்படும் எண்ணற்ற உணவகங்களாகும். அனைத்து திசைகளையும் சேர்ந்த மக்களின் சுவை ரசனைகளை இவை பூர்த்தி செய்கின்றன. உலகில் எந்தப் பகுதியிலிருந்து வந்தாலும் சரி அவர்கள் ஊர் உணவுவகைகள் கொச்சியில் இல்லாமல் போகாது.
ஆனால், கொச்சியின் உள்ளூர் உணவு வகைகளை சுவைப்பது ஒரு தனி அனுபவம் எனலாம். இங்குள்ள தனித்தன்மையான சைவ மற்றும் அசைவ உணவுமுறைகள் நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடையவை. குறிப்பாக வாழை இலையில் மூடி சமைக்கப்பட்ட மீன் உணவு இங்கு பிரசித்தம்.
ஒவ்வொருக்கும் ஏற்ற அம்சங்கள்
கொச்சிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் எந்த ஒரு சுற்றுலாப்பயணியும் ஏமாற்றத்துடன் திரும்பாத வகையில் இங்கு வரலாற்று ஸ்தலங்கள், ஆன்மீக மையங்கள், அருங்காட்சியகங்கள், குழந்தைகள் பூங்கா மற்றும் முக்கியமாக பலவகை ‘மால்’ கள் எனப்படும் அங்காடி வளாகங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
இயற்கை ரசிகர்களின் தேடுதலுக்கும் இங்கு கண்கவர் விருந்துகள் காத்திருக்கின்றன. காட்டுயிர் சரணாலயங்களும், பூங்காக்களும் பலவிதமான தாவரங்கள் மற்றும் உயிரினங்களுடன் கொச்சிக்கு அருகில் அமைந்துள்ளன.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா அழகை பார்த்து ரசிப்பது முற்றிலும் ஒரு பரவச அனுபவம் என்றே சொல்லலாம். அரபிக்கடலை ஒட்டிய உப்பங்கழிப்பகுதியில் ஒரு மாலை நேரத்தை நேசத்துக்குரியவர்களுடன் கழிப்பது நமக்கு புத்துணர்சியூட்டும் அனுபவமாக இருக்கும்.
இந்த உப்பங்கழி ஆறானது கேரளாவின் மிகப்பெரிய ஏரியான வேம்பநாட் ஏரியின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மரைன் டிரைவ் எனப்படும் கடற்கரை உல்லாச சாலை அரபிக்கடல் நீரை தொட்டுக்கொண்டிருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது தம்பதியர்களுக்கான ஏகாந்த மாலை நேர உலாவலுக்கு மட்டுமல்லாமல் குடும்ப சகிதம் கடலின் பிரம்மாண்டத்தை ரசிக்கவும் ஏற்ற ஸ்தலமாகும். கடற்காற்றும், அன்புக்குரியவர்களின் அருகாமையும் உங்கள் மனதை லேசாக்கி புத்துணர்ச்சியூட்டும் என்பதை நீங்கள் இந்த இடத்திற்கு விஜயம் செய்யும்போது புரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு பசியெடுக்கும்பட்சத்தில் அருகிலேயே உள்ள ‘பே பிரைட் மால்’ க்கு சென்று உணவருந்தலாம். இங்குள்ள ‘ஃபிஷ் ஸ்பா’ எனும் இடத்தில் மீன்களாலேயே ‘கால் சரும அழகுப்படுத்தல்’ செய்யப்படுவது ஒரு சுவாரசியமான அம்சம்.
நகரத்தின் புராதன வரலாற்றுப்பின்னணி குறித்த அம்சங்களை பார்க்க விரும்பினால் கொச்சி கோட்டைக்கு விஜயம் செய்யலாம். இது மட்டஞ்சேரி தீபகற்ப வளைகுடாப்பகுதியில் உள்ளதால், எங்கும் எழில் நிறைந்த இயற்கைக் காட்சிகளை இந்த கோட்டை ஸ்தலத்திலும், செல்லும் வழியிலும் பார்த்து ரசிக்கலாம்.
கொச்சி கோட்டை வளாகத்தில் மட்டஞ்சேரி அரண்மனை மற்றும் ‘சாண்டா குரூஸ் பஸிலிகா சர்ச்’ 'இரண்டும் முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. மேலும், இந்த கடற்கரையோரம் மூங்கில் தாங்கிகளில் பொருத்தப்பட்ட சீன மீன்பிடி வலைகளையும் பயணிகள் பார்க்கலாம்.
இப்பகுதியை சுற்றி வருவதன் மூலம் கொச்சி நகர பாரம்பரிய அம்சங்களை நேரில் கண்டு ரசித்து புரிந்துகொள்ள முடியும். விருப்பமுள்ள பயணிகள் கொச்சி கோட்டைப்பகுதியில் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.
கொச்சி மாநகரம் விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. பிரபல்யமான சுற்றுலாத்தலமாக உள்ளதால் பிரயாணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்துகொள்வது நல்லது. வருடமுழுதுமே இனிமையான பருவநிலை நிலவுவதால் கொச்சிப்பகுதிக்கு விரும்பும்போது பயணம் மேற்கொள்ளலாம்.
இருப்பினும் மே மாதத்தில் கோடையின் வெப்பம் அதிகமாக இருக்குமென்பதையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
பொதுவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இடைப்பட்ட பருவங்களில் கேரளாவுக்கு விஜயம் செய்வது சிறந்தது. கொச்சியில் தங்குமிடங்களும், விடுதிகளும் ஏராளம் இருப்பதால் பயணிகள் தங்கள் பணவசதிக்கேற்ப எளிமையாகவோ சொகுசாகவோ தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பயணிகளை விருந்தினராகவே வீட்டில் தங்க வைக்கும் நடைமுறையும் கொச்சியில் பிரசித்தமாக உள்ளது. இப்படி ஒரு வீட்டில் தங்குவதன் மூலம் உள்ளூர் பாரம்பரிய பழக்கவழக்கங்களை நேரில் பார்த்து ரசித்து அனுபவிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.