சிவபெருமானுக்கான இந்த திருநாக்கரா மஹாதேவா கோயில் 16ம் நூற்றாண்டில் தெக்குங்கூர் ராஜாவால் உருவாக்கப்பட்டுள்ளது. இது கோட்டயம் பிரதான நகரத்திலேயே அமைந்துள்ளது.
கேரள பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் காணப்படும் கூத்தம்பலம் எனப்படும் நடன அரங்கின் வடிவமைப்பு மிக பிரசித்தமான ஒன்றாகும். இங்கு நடனம் மற்றும் நிகழ்த்து கலைகளின் அரங்கேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
இந்த சிவன் கோயிலின் சுவர்களில் பல புராணக்கதைகளின் காட்சிகளை சித்தரிக்கும் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. இவற்றின் அழகைக்காண வரும் ரசிகர்கள் முதல் பக்தர்கள் வரை தினமும் ஏராளமான பார்வையாளர்களை இது ஈர்த்து வருகிறது.
‘பல்குண உத்சவம்’ எனப்படும் வருடாந்திர திருவிழா ஹிந்து பஞ்சாங்க மீன மாதத்தின் போது (மார்ச்-ஏப்ரல்) கொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படும் இந்த திருவிழா வைபவம் ‘ஆராட்டு’ எனும் கடைசி சடங்குடன் முடிவு பெறுகிறது. பலவிதமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் சடங்குகள் இத்திருவிழாவின் போது நடத்தப்படுகின்றன.