கேரளாவின் மையப்பகுதியில் உள்ள ஒரு எழில் நிறைந்த கிராமம் சோட்டாணிக்கரா. இது எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களின் இஷ்ட தெய்வமாக இது பிரசித்தி பெற்று விளங்குகிறது. கேரளாவின் முக்கிய புண்ணிய ஷேத்திரங்களில் ஒன்றான இந்த சோட்டாணிகராவில் வருடந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் குவிகின்றனர். சாந்தமும் தெய்வீகமும் தவழும் இந்த பிரசித்தமான கோயில் ஸ்தலமானது ஆன்மீக நிம்மதியை தேடிவரும் பக்தர்களை புத்துணர்வு பெறவைத்து திரும்ப வைக்கிறது.
இந்த சிறிய கிராமத்தில் ஒரு சுற்றுலாப்பயணி ரசிக்கக்கூடிய ஏராளமான அம்சங்கள் நிரம்பியுள்ளன. சோட்டாணிக்கரா பகவதி கோயில் என்ற பிரசித்தமான காளி கோயில் இந்த ஸ்தலத்தின் பிரதான ஆலயமாகும்.
பல நூற்றாண்டுகள் பழமையை உடைய இந்த கோயிலின் அம்மன் வடிவம் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் பலகாலமாக வணங்கப்பட்டு வருகிறது. ‘விஸ்வகர்மா ஸ்தபதிகள்’ என்றழைக்கப்படும் மரக்கட்டுமான கலைஞர்களின் கட்டிடக்கலை திறமைக்கான சான்றாகவும் இந்தக்கோயில் வீற்றுள்ளது.
‘சோட்டாணிக்கரா மகம் தொழல்’ எனும் கோலாகலமான உற்சவம் இந்த கோயிலில் வருடாந்திரமாக நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்களும் பயணிகளும் கலந்துகொள்கின்றனர்.
ஒருகாலத்தில் திருப்புனித்துறா அரண்மனை என்றழைக்கப்பட்ட மாளிகையில் இயங்கும் ஆர்க்கியாலஜிகல் மியூசியம் சோட்டாணிக்கராவில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.
கொச்சி ராஜ வம்சத்துக்கு சொந்தமான பல அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. காடுதுருத்தி சிவன் கோயில் மற்றும் பூர்ணதிரயேசா ஆகிய இரண்டு கோயில்கள் இந்த தலத்தின் இதர விசேஷமான கோயில்களாக அறியப்படுகின்றன. காடுதுருத்தி சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள எம்பாங்க் ஏரியும் கோயிலுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது.
பக்தியுடன் கலந்த உள்ளூர் கலாச்சாரம்
சோட்டாணிக்கரா பகவதி கோயில் மற்றும் இதர கோயில்கள் இந்த தலத்தில் அமைந்திருப்பதால் சோட்டாணிக்கரா கிராமம் தனித்தன்மையான கலாச்சார அம்சங்களை கொண்டு விளங்குகிறது.
கிராமம் முழுக்கவே ஒருவித பக்தி மணம் கமழுவதுடன் எப்போதும் கீர்த்தனைகள் மற்றும் வாத்தியங்களின் ஒலி இந்த கோயில்களிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை பயணிகள் கேட்டு வியக்கலாம்.
இந்த கோயில்களில் நடத்தப்படும் விதவிதமான திருவிழாக்களும் சடங்குகளும் சோட்டாணிக்கரா கிராமத்துக்கு நிரந்தரமான ஒரு திருவிழாக்கோலத்தை வழங்குகின்றன. வருடம் முழுக்கவே பக்தர்களால் நிரம்பி வழியும் இந்த திருத்தலமானது ஒரு ஆன்மீக கேந்திரம் போன்று காட்சியளிக்கிறது.
ஓணம் பண்டிகையின்போது நடத்தப்படும் திருவோணம் விருந்துண்ணல் சடங்கு, நவராத்திரி ஆஹோஷம், விருச்சிக மண்டல மஹோத்சவம், திருக்கார்த்திகை திருவிழா, ராமாயண மாசம் மற்றும் உத்தரம் ஆராட்டு போன்றவை சோட்டாணிக்கரா தலத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் சடங்குகள் மற்றும் திருவிழாக்களாகும். சோட்டாணிக்கரா பகவதி கோயிலில் நடத்தப்படும் வருடாந்திர திருவிழாவில் ஏழு யானைகளுடன் நடத்தப்படும் ஊர்வலம் மிகப்பிரசித்தமான ஒரு வைபவமாகும்.
இனிமையான பருவநிலை மற்றும் சுலபமான போக்குவரத்து வசதிகள்
வருடத்தின் பெரும்பாலான காலத்தில் சோட்டாணிக்கரா வெப்ப மண்டலப் பருவநிலையை பெற்றுள்ளது. கோடைக்காலம் வறட்சியுடனும், மழைக்காலம் ஈரப்பதத்துடனும் காட்சியளிக்கிறது. இந்த கோயில் தலத்துக்கு விஜயம் செய்ய உகந்த காலம் ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட மாதங்களாகும்.
திருவிழா நிகழ்ச்சிகளை காண்பதற்கு வசதியாகவும் பயணிகள் தங்கள் விருப்பப்படி சுற்றுலாத்திட்டத்தை அமைத்துக்கொள்ளலாம். கொச்சிக்கு அருகிலேயே அமைந்திருப்பதால் சோட்டாணிக்கராவுக்கு போக்குவரத்து வசதிகளில் எந்தக்குறையுமில்லை.
கொச்சியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களோடு இந்த சோட்டாணிக்கரா பயணத்தையும் இணைத்துக்கொள்வது மிகச்சிறந்தது. விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவை கொச்சியிலேயே அமைந்துள்ளன. அங்கிருந்து சோட்டாணிக்கராவுக்கு பேருந்து மூலமாக வந்து சேரலாம்.
சாந்தி நிலவும் சிக்கன யாத்ரீக ஸ்தலம்
எல்லா கேரளத்து தெற்குப்பகுதி கிராமங்களையும் போலவே சோட்டாணிக்கராவும் பசுமையான இயற்கை எழில் வாய்க்கப்பெற்றுள்ளது. இந்த கிராமத்தை நோக்கி சாலையில் பயணிக்கும்போதே இருபுறமும் வளப்பமான வயல் வெளிகளை பார்த்து ரசிக்க முடியும்.
சாலையின் இருபுறமும் அசைந்தாடும் தென்னை மரங்கள் அதன் தென்றலால் நம்மை ஸ்பரிசிப்பதை உணர்ந்து நம்மால் புன்முறுவல் பூக்காமல் இருக்கவே முடியாது. இந்த ஆன்மீக கிராமத்தில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையானது பூஜைகள் சடங்குகள் போன்ற ஐதீகங்களுடன் பின்னி பிணைந்துள்ளது.
தொடர்ந்து 12 நாட்களுக்கு இந்த சோட்டாணிக்கரா கோயிலில் அம்மன் தரிசனம் செய்தால் வாழ்நாள் முழுமைக்கும் போதுமான அருள் கிட்டும் என்பது இங்கு நிலவும் நம்பிக்கையாகும்.
சோட்டாணிக்கராவுக்கு விஜயம் செய்யும் பயணிகள் யாவருமே அருகிலுள்ள இதர முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்வதற்கான திட்டங்களுடன் வருகை தருகின்றனர்.
சோட்டாணிக்கரா ஸ்தலத்துக்கு அருகில் ஏராளமான பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. திருவாங்கூர் ஃபெர்ட்டிலைசர்ஸ், மட்டஞ்சேரி ஹார்பர், வைக்கம் மஹாதேவா கோயில் மற்றும் எர்ணாகுளத்தப்பன் கோயில் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கனவாகும்.
சிக்கனமான தங்குமிட வசதிகள் மற்றும் மலிவான போக்குவரத்து கட்டணங்கள் போன்ற அம்சங்கள் இந்த சோட்டாணிக்கரா ஆன்மீக தலத்தை ஒரு எளிமையான சிரமத்தை தராத யாத்திரை ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.