கோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது நகரமான இது, பெருநகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பெரிய தொழில் துறை மையமான இந்த நகரம் "தென் இந்தியாவின் மேன்செஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது.
கல்வி மற்றும் தொழில்மயமாக்கலில் கோயம்புத்தூர் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது.இருப்பினும் இந்நகரின் வண்ணமயமான கடந்தகால வரலாற்றை இன்றும் நம்மால் காண முடியும்.
தென் இந்தியாவின் மாபெரும் ராஜவம்சங்களான சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களாலும் கூட கோயம்புத்தூர் ஆளப்பட்டிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் கோயம்புத்தூர் என்ற பெயரே நாயக்கர்களின் பிரதம மந்திரியான கோயன் என்பவரின் பெயரிலிருந்தே உருவானது என்று இங்குள்ளவர்கள் நம்புகிறார்கள்.
17-ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் மைசூர் ராஜ்ஜியத்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்தது. 1799ல் ஆங்கிலேயர் இந்நகரைக் கைப்பற்றிய பின் கோயம்புத்தூர் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு பகுதியாக மாறியது.
நவீன கோயம்புத்தூரின் வரலாறு இருபதாம் நூற்றாண்டு வரை துவங்கவில்லை. 1930ஆம் வருடத்திற்குப் பிறகே இந்த நகரம் ஜவுளித்துறையின் காரணமாக மிக வேகமாக வளரத் துவங்கியது.
இனிமையான காலநிலை, வளமான மண் மற்றும் கடுமையாக உழைக்கும் மக்கள் எனப் பல விஷயங்கள் ஒன்றிணைந்து கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றன.
பருத்தி நகரம்:
ஜவுளி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக கோயம்புத்தூர் தமிழகத்தின் முக்கியமான நகரம் ஆகும். புராதன கைவினைத் தொழில்கள் மற்றும் புதிய தொழிநுட்பக் கண்டுபிடிப்புகள் ஒன்றாக கைகோர்த்து செல்லும் இடம் இது.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டின் இரண்டாவது அதிக வருமானம் ஈட்டும் நகரமான இது, தென் இந்தியாவில் வருமான அடிப்படையில் நான்காவது நகரமாக வரிசைப்படுத்தப்படுகிறது.
இந்நகரம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பாலும் ஜவுளித் துறையை சார்ந்து இருப்பதால் இந்தியாவின் பருத்தி நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆயிரக்கணக்கான, லட்சக்கணகான மக்களின் வருமானத்திற்கு ஜவுளித்துறையே மூலமாக விளங்குகிறது.
இந்நகரைச் சுற்றிலும் நிறைய பருத்தி வயல்கள் உள்ளன. இது மட்டுமல்லாது நாட்டிலேயே அதிகமாக உள்ளாடைப் பொருட்கள் தயாராவதும் இங்கு தான். நாட்டின் மிகப் பெரிய பண்ணைத் தொழில் இந்த நகரில் உள்ளது.
கோயம்புத்தூரில் பல சிறிய மற்றும் பெரிய ஜவுளி ஆலைகள் அமைதியான முறையில் இயங்கி வருகின்றன. இந்த ஜவுளி ஆலைகள் கோயம்புத்தூர் நகரிலும் அதற்கு வெளியிலும் உள்ள பல மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்றன.
இன்னும் சொல்லப் போனால் பல மாணவர்கள் வெளியிலிருந்து தங்களது ஆராய்ச்சிப் பணிகளுக்காக இங்குள்ள ஜவுளி ஆராய்ச்சி நிறுவனங்களான "மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (CICR) , தென் இந்திய ஜவுளி ஆராய்சிக் கழகம் (SITRA) மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை பள்ளி ஆகியவற்றுக்கு வருகின்றன. நகரத்துக்குள் தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு மையங்கள் அமைந்துள்ளன.
மெடிடெக் எனப்படும் ஒரு சிறப்பு மையம் ஸிட்ராவிலும் (SITRA, மற்றொன்றான இந்துடெக், பி.எஸ்.ஜி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலும் அமைந்துள்ளன.
தகவல் தொழிழ்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த பிற தொழில்களின் வளர்ச்சி
கடந்த பதினைந்து வருடங்களில் கோயம்புத்தூர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகளில் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இந்த நகரம் அதிகமான மென்பொருள் பட்டதாரிகளை உருவாக்குகிறது.
தகவல் தொழில்நுட்ப வளாகங்களும் , பீ.பி.ஓ (BPO)க்களும் டைடல் பார்க்கில் நிறுவப்பட்டபின் தொழில்நுட்பம் இந்நகரில் எல்லை தாண்டிய வளர்ச்சி பெற்றுள்ளது. காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெல், ராபர்ட் பாஸ்ச், ஐ.பி.எம் முதலிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வளாகத்தில் அமைந்துள்ளன.
இந்த நகரில் அதிகமாக பார்வையிடப்படும் இடங்கள் மருதமலை கோயில், தியானலிங்க ஆலயம், இந்திரா காந்தி வனவிலங்கு காப்பகம் மற்றும் பிளாக் தண்டர் தீம் பார்க் ஆகியன.
வெப்பம் நிறைந்த கோடைக்காலம் , மிதமான மழைக்காலம், கடும் குளிர்காலம் என இந்நகரின் காலநிலை மாறுபடுகிறது. கோயம்புத்தூரில் விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியன இருப்பதோடு அருகிலுள்ள நகரங்களோடு சிறந்த சாலை அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.