சேலம், தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் வட மத்திய பிரதேசத்தில் அமைந்த நகரமாகும். சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், “மாம்பழ நகரம்” என்றும் அழைக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமான இது, மாநகராட்சி மன்றமாக விளங்குகிறது.
இந்நகரின் பெயர் “சேரம்” என்ற சொல்லில் இருந்து வந்ததாகவும், இம்மண்டலம் “சேரம்” நிலத்தின் ஒரு பகுதியாக விளங்ககியதனாலேயே இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. முற்காலத்தில், இவ்வூர் மக்கள் பெண்களின் உடையாகிய சேலை நெய்வதை தம் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர்.
சேலம் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்
சேலம், பிரபலமான சுற்றுலா மற்றும் வழிபாட்டுத்தலமாகும். இந்நகர், கோட்டை மாரியம்மன் கோயில், தாரமங்கலம் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில், அருள்மிகு அழகிரிநாதர் கோயில், எல்லைப்பிடாரி அம்மன் கோயில், ஜாமா மஸ்ஜீத் போன்ற பல வழிபாட்டுத் தலங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது.
மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மலை, கிளியூர் நீர் வீழ்ச்சி, தாரமங்கலம் மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்கள், சேலத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பதனால், இவ்விடங்களுக்கு சேலத்தில் இருந்து எளிதாகச் செல்லலாம்.
சேலம் ஒரு பிரபலமான வணிக மையமாகவும் இருக்கின்றது. இந்நகரம் நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் வெள்ளிக் கொலுசுகளையும், உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படும் தரமான துணிவகைகளையும் உற்பத்தி செய்கிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் பட்டு துணிகளினால், சேலம், மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு வந்தால் இவற்றை மலிவான விலையில் வாங்கலாம்.
சேலம் மாநகரின் வரலாறு
முற்காலத்தில் “சேரலம்” என்ற பெயரில் வழங்கி வந்த சேலம் நகர், சேர இராஜ்ஜியத்தின் மாமன்னர் சேரமான் பெருமாள் என்பவரால் உருவாக்கபட்டது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.
“சேரலம்” என்ற வார்த்தைக்கு “மலைத்தொடர்” என்று அர்த்தம். சேலத்தின் வரலாறு கற்காலத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பாலியோலித்திக் மற்றும் நியோலித்திக் காலங்களில், மக்கள் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன.
சேலம், பல்வேறு காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்த பல இராஜ்ஜியங்கள் மற்றும் இராஜபரம்பரைகளின் ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளது. இவ்வூர், பாண்டிய, பல்லவ, சோழ, ஹொய்சாலா மற்றும் சாளுக்கிய மன்னர்களால் ஆளப்பெற்ற பெருமை வாய்ந்தது.
முதன் முதலாக, இங்கு வாழ்ந்த மக்கள், கங்கா இராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது. அப்போது, இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் கங்கா குலத்தை சேர்ந்தவரகள் என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் இப்பகுதி மேற்கத்திய கங்கா இராஜ்ஜியத்தின் கீழ் வந்துள்ளது.
அதன் பின் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் படையெடுப்பின் போது, மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. நாயக்கர்களுக்குப் பின், இப்பகுதியை “கட்டி முதலீஸ் பொலிகார்ஸ்” ஆண்டுள்ளனர்.
அதன் பின், 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த மைசூர்-மதுரை போரின் போது, ஹைதர் அலி, இப்பகுதியை கைப்பற்றினார். 1768-ஆம் ஆண்டில் கர்னல் வுட்டால் இந்நகரம் கைப்பற்றப்பட்டது.
ஆனால் 1772-ஆம் வருடம், அவரிடமிருந்து ஹைதர் அலி மீண்டும் சேலத்தை கையகப்படுத்தினார். 1799-ஆம் வருடம் லார்ட் கிளைவினால் கைப்பற்றப்பட்டு, 1861-ஆம் ஆண்டு வரை இராணுவத்தளமாக இருந்துள்ளது. கொங்குப் படைகளுக்கும் ஆங்கிலேய கூட்டுப் படைகளுக்கும் நடைபெற்ற போர்களின் போது, சேலமும், சங்ககிரியும் போர்முனைகளாக இருந்துள்ளன.
சேலத்தை எப்படி அடையலாம்?
சேலத்திற்கு பயணிப்பது மிகவும் எளிதாகும்; ஏனெனில் இது வான், ரயில் மற்றும் சாலை வழிப் போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்திலிருந்து நாட்டின் மற்ற நகரங்களுக்கும், உலகின் பல பகுதிகளுக்கும் விமானங்கள் உள்ளன. சேலம் ரயில் நிலையம் ஒரு முக்கியமான ரயில் சந்திப்பாகும்.
இங்கிருந்து, நாட்டின் எல்லா முக்கியமான பெருநகரங்களுக்கும், சிறுநகரங்களுக்கும் ரயில்கள் உள்ளன. ஏராளமான பேருந்துகள், சேலத்திலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
சேலம் நகரின் வானிலை
சேலத்தில் வெப்ப மண்டல வானிலையே பெரும்பாலும் நிலவுகிறது. இங்கு செல்வதற்கு, நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலமே சிறந்ததாகும்.