கடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் 'கடலின் நகரம்' என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு அழகிய கடற்கரைகள் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆலயங்களுக்காகவும் பெயர்பெற்ற இடம் கடலூர் நகரம் . இது பழைய கடலூர் (ஓல்டு டவுன்) மற்றும் புதிய கடலூர் (நியூ டவுன்) என்று இரண்டு வகை நிர்வாகப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
திருப்பாதிரிப்புலியூர் என்ற புதிய கடலூர் நகரத்தை கெடிலாம் நதி பாய்ந்து தனியாக பிரிக்கிறது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தின் போது இஸ்லாமாபாத் என்றழைக்கப்பட்ட இந்த நகரத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கையும் கணிசமாக காணப்படுகின்றன. மேலும் கடலூர் நகரம் 1748 முதல் 1752-ஆம் ஆண்டுகள் வரை ஆங்கிலேயர்களின் சொத்துக்களை வைக்கும் தலைநகரமாக விளங்கி வந்தது.
கடலூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
கடலூர் நகரம் சைவ மற்றும் வைணவ கோவில்களுக்காக புகழ் பெற்று விளங்கும் தலமாகும். இங்குள்ள சில முக்கிய கோவில்களாக பாதாளீஸ்வரர் கோவில், திருவாகீந்திரபுரம் கோவில், மங்களபுரீஸ்வரர் கோவில், சுடர்கொழுந்தீஸ்வரர் கோவில் ஆகியவை அறியப்படுகின்றன.
இங்கிருக்கும் பல்வேறு கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கும் இடங்களாக இருக்கின்றன. தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான சில்வர் பீச் கடலூருக்கு மிக அருகில் உள்ளது, செயிண்ட் டேவிட் கோட்டை மற்றும் கார்டன் ஹவுஸ் ஆகிய இடங்கள் அவற்றினுடைய கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவங்களுக்காக பார்க்க வேண்டிய இடங்களாகும்.
சதுப்பு நில பகுதிகளுக்காகவும், நீர் விளையாட்டுகளுக்காகவும் புகழ் பெற்று விளங்கும் பிச்சாவரம் கடலூரில் தான் உள்ளது. இது மாங்குரோவ் காடுகளின் தொடர்ச்சியாக இருக்குமிடமாகும்.
கடலூருக்கு அருகிலிருக்கும் சில தீவுகள் பறவைப் பிரியர்களை ஈர்ப்பதில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. இங்கிருக்கும் படகு வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதி அளிப்பதாகவும், புதியதோர் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் உள்ளது.
கடலூரில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களாக நிலக்கரி சுரங்கங்கள், கெடிலாம் கேஸில், கேப்பர் மலைகள், சிதம்பரம் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் ஆகிய இடங்கள் இருக்கின்றன.
26 டிசம்பர் 2004-ல் ஏற்பட்ட சுனாமி அலைகளில் கடுமையான தாக்குதலுக்குள்ளான பின்னரும் கடலூர் சாகாவரம் பெற்ற நகரமாக மீண்டும் உயிர்த்தெழுந்து வளர்ந்து வந்திருக்கிறது.
வரலாற்றின் பாதையில் கடலூர்
வரலாற்றில் கடலூர் மாவட்டம் 'சோழநாடு' மற்றும் 'நடுநாடு' ஆகிய பகுதிகளை கொண்டிருந்தது. அந்த காலங்களிலிருந்தே இது துறைமுக நகரமாக இருந்து வந்தது. இந்த நகரம் டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கியலேயர்களால் வரலாற்றில் ஆளப்பட்டு வந்திருக்கிறது.
1758 ஆம் ஆண்டு பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் கடற்படைகளுக்கிடையில் ஒரு பெரும் போர் ஒன்று கடலூரில் நிகழ்ந்தது. அமெரிக்க சுதந்திரப் போர் மற்றும் இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர் ஆகியவை நடந்து கொண்டிருந்த போது அதன் தாக்கம் கடலூரின் அமைதியையும் பாதித்தது.
இறுதியாக ஒரு அமைதி உடன்படிக்கையின் படி கடலூர் ஆங்கிலேயர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடலூரின் சில பகுதிகள் இன்றும் இந்த காலனிய ஆட்சியின் சுவடுகளை தாங்கி நின்று கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட சில கல்வி நிறுவனங்கள் இன்றும் கடலூரில் செயல்பட்டு வருகின்றன.
கடலூரை அடையும் வழிகள்
இந்நகரம் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தின் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி விமான நிலையம் கடலூருக்கு மிக அருகில் இருக்கிறது, சென்னை விமான நிலையம் மிக அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையமாகவும் இருக்கிறது.
கடலூரில் உள்ள இரண்டு ரயில் நிலையங்கள் இந்நகரை பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. தேசிய நெடுங்சாலை 45A-ல் அமைந்துள்ள கடலூர் சாலைவழியே மிகச்சிறந்த இணைப்பை பெற்றுள்ள நகரமாகும்.
கடலூரின் பருவநிலை
மித வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கடலூரில் பருவநிலையும் மிதமானதாக இருக்கும். குளிர்காலம் நிலவும் அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் கடலூருக்கு வருவது நல்ல அனுபவத்தை கொடுக்கும். இந்த நேரத்தில் வெப்பநிலை மிகவும் ரம்மியமானதாக இருப்பதால் பயணிகள் நல்ல சூழலை எதிர் கொள்ள முடியும்.