பொன்முடி மலைவாசஸ்தலம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த அற்புத மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதோடு, ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
பொன்முடி என்ற வார்த்தைக்கு 'தங்க சிகரம்' என்று பொருள். இந்த மலைவாசஸ்தலத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையின் வனப்பும், இது ஒளித்துவைத்திருக்கும் அதிசயங்களும் இயற்கை காதலர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தித்திக்கும் பயண அனுபவத்தை கொடுக்கும்.
அதோடு ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டிருக்கும் இந்த மலைவாசஸ்தலம், டிரெக்கிங் மற்றும் ஹைக்கிங் போன்ற சாகச பயணத்தில் ஈடுபட விரும்பும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாய் திகழ்ந்து வருகிறது.
பொன்முடி மலைவாசஸ்தலத்தில் பள்ளத்தாக்குகள், ஏரிகள், தோட்டங்கள் என்று பயணிகள் பார்த்து ரசிக்க எண்ணற்ற கவர்ந்திழுக்கும் சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் கோல்டன் வேல்லி, பெப்பரா வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான சிகரங்களில் ஒன்றான அகஸ்த்தியர்கூடம் போன்றவை முக்கியமானவை.
அதோடு மழைக் காலங்களில் இயற்கையாய் உருவான ஓடைகள் மற்றும் சிறிய அருவிகள் புடைசூழ அழகே உருவாய் காட்சியளிக்கும் மீன்முட்டி அருவியை நீங்கள் தவற விட்டுவிடக் கூடாது. மேலும் இயற்கையழகு சார்ந்த பகுதிகள் தவிர பொன்முடி மலைவாசஸ்தலம் ஆயுர்வேத சிகிச்சைக்காகவும் வெகுப்பிரபலம்.
பொன்முடி மலைப்பகுதியை திருவனந்தபுரம் நகரிலிருந்து சாலை மூலமாக எளிதில் அடைந்து விட முடியும். இந்த மலைவாசஸ்தலம் வருடம் முழுமையும் இதமான வெப்பநிலை கொண்டிருந்தாலும், நீங்கள் இதன் பனிக் காலங்களில் சுற்றுலா வந்தால் ஹைக்கிங், டிரெக்கிங் போன்ற சாகச நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.