ஜம்புலிங்கேஸ்வர் மற்றும் அகிலாண்டேஸ்வரி கோயில் திருவானைகாவலில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழ மன்னரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
அதோடு சோழர்கள் காலத்தில் எழுதப்பட்ட சில கல்வெட்டுகள் கோவில் சுவர்களில் இன்றும் காணப்படுகின்றன. இக்கோவில் கட்டப்பட்டு 1,800 ஆண்டுகள் ஆனபோதிலும் பராமரிப்பு பணியினால் இன்றும் நல்ல நிலையில் காணப்படுகிறது.
ஜம்புகேஸ்வர் கருவறை அடியில் ஒரு நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் இந்த ஊற்று நீர் ஆதாரத்தை காலி செய்ய முயன்றாலும் அது மறுபடியும் நிரம்பி விடுகிறது.
புராணத்தின் படி, பார்வதி தேவி சிவபெருமானின் தவத்தை கலைக்க முயற்சி செய்ததால் அவர் பார்வதி மீது கோபம் கொண்டு பூமியில் சென்று தவம் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்பின்னர் பார்வதி தேவி, அகிலாண்டேஸ்வரி வடிவத்தை எடுத்து ஜம்பு காட்டில் தனது தவத்தை தொடங்கினார்.
அச்சமயத்தில் காவேரி நீர் மூலமாக ஒரு லிங்கத்தை அவர் உருவாக்கினார். மேலும் பார்வதி தவம் செய்த அந்த இடத்தில்தான் இந்த கோயிலும் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.