புனிதமான கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள விந்தியாஞ்சல், இந்தியாவின் முக்கிய சக்திபீடங்களுள் ஒன்றாகும். இந்து காவியங்கள் மற்றும் வேதசாஸ்திரங்களின் படி, இது துர்க்கா தேவியின் உறைவிடமாகக் கருதப்படுகிறது. போற்றுதலுக்குரிய தெய்வமாகிய துர்க்கை, மஹிஷாசுரா என்ற அரக்கனை வதம் செய்த பின் விந்தியாஞ்சலை தன் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
விந்தியாஞ்சல் அதன் புகழியின் உச்சியில் இருந்த போது, பல்வேறு கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைக் கொண்டிருந்திருக்கிறது. இவை யாவும் முகாலயப் பேரரசரான ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தின் போது அழிக்கப்பட்டு விட்டன. எனினும், இவற்றுள் சில, சிதையாமல் இன்று வரை வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றன.
கோயில்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள்
விந்தியாஞ்சல் இந்துக்களின் மிக முக்கியமான யாத்ரீக மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. விக்டோரியன் காலத்தைச் சேர்ந்த பல்வேறு நேர்த்தியான கட்டிடங்களைக் கொண்டிருக்கும் பெருமை வாய்ந்த மிர்சாப்பூர் மாவட்டத்தில் தான் விந்தியாஞ்சலும் அமைந்துள்ளது.
கோயில்கள் தவிர்த்து, விந்தியாஞ்சலின் அழகிய இயற்கைக் காட்சிகளும் அதன் கூடுதல் ஈர்ப்பாக விளங்குகின்றன. இப்பகுதி பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் வளமையான காடுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
விந்தியாஞ்சல், அதன் அழகிய கோயில்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளினால், பைத்தியம் பிடிக்க வைக்கும் கூட்டநெரிசலில் இருந்து தப்பிக்க நினைப்போரின் அபிமான சுற்றுலாத் தலமாகக் கருதப்படுகிறது.
விந்தியாஞ்சல் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
ராமாயண காலத்தைச் சேர்ந்ததான, சீதைக்கென அர்ப்பணிக்கப்பட்ட குளமான சீதா கந்த் உள்ளிட்ட பல்வேறு ஈர்ப்புகள் விந்தியாஞ்சலில் காணப்படுகின்றன. மேலும், காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள காளிக்கோ என்ற புராதனக் கோயிலையும் இங்கு காணலாம்.
புராணங்களின் படி, ராமபிரானால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராமேஷ்வர் மஹாதேவ் கோயிலுக்கும் சென்று வரலாம். கிருஷ்ண பகவானின் வளர்ப்புத் தாயான யஷோதாவின் மகள், அஷ்டபுஜா தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள அஷ்டபுஜா தேவி கோயிலும் இங்கு உள்ளது.
விந்தியாஞ்சலின் காக்கும் கடவுளான துர்க்கையை பெருமைப்படுத்தும் விதமாக விந்தியவாசினி தேவி கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. விந்தியவாசினியின் பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் விந்தியவாசினி ஜயந்தி சமாரோ என்ற திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.
விந்தியாஞ்சலை எவ்வாறு அடையலாம்
விந்தியாஞ்சல், சாலை வழியாக மிக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் இருந்து இரயில் மற்றும் வான் வழி போக்குவரத்து சேவைகள் மூலமும் விந்தியாஞ்சலை அடையலாம்.
விந்தியாஞ்சல் செல்வதற்கு ஏற்ற காலகட்டம்
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலமே விந்தியாஞ்சல் செல்வதற்கு ஏற்ற காலகட்டம் ஆகும்.