கீழுண்ண எழரா பீச் எனும் பெயரானது கீழுண்ண பீச் மற்றும் எழரா பீச் ஆகிய இரண்டு அடுத்தடுத்துள்ள அழகிய கடற்கரைகளை சேர்த்தே குறிப்பிடுகிறது. அதிக கூட்டமில்லாத, அமைதியான, ஆழமில்லாத அலைப்பகுதியுடன் காட்சியளிக்கும் ரம்மியமான இந்த கடற்கரைகள் கண்ணூர் பகுதியில் பிரசித்தமான பொழுதுபோக்கு கடற்கரைகளாக புகழ்பெற்றுள்ளன. இந்த இரட்டை கடற்கரைகள் கண்ணூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் சாலைமார்க்கமாக சுலபமாக சென்றடையும்படி அமைந்துள்ளன.
பரந்து காணப்படும் மணற்பாங்கான கடற்கரைகளும், ஆங்காங்கு சிற்பங்கள் போன்று காட்சியளிக்கும் பாறைகளும், ஆழமில்லாத தங்க மணற்பரப்பில் வந்து கால்களை ஸ்பரிசிக்கும் அலைகளும் இந்த கடற்கரைகளின் சுவாரசியமான அம்சங்களாகும். குறைந்த ஆழத்தையும் நிசப்தத்தையும் கொண்டிருக்கும் இந்த வளைகுடாப்பகுதி நீந்தி மகிழ்வதற்கும் சூரியக்குளியலில் ஈடுபடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது.
பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து சற்றே விலகி இயற்கை எழில் மிகுந்த கடற்கரையில் மனதை உற்சாகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணுபவர்கள் யோசிக்காமல் இந்த கடற்கரைகளுக்கு வந்து சேரலாம்.
ஒரு மாலை நேரத்தை இங்கு கழித்தாலே போதும் நம் மனம் லேசாகி விட்ட உணர்வைப்பெறலாம். மழைக்காலம் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் இந்த கடற்கரைப்பகுதிக்கு விஜயம் செய்யலாம்.