கோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கப்பட் பீச் தன் அழகிய மணற்கரைகளுக்கும் வரலாற்றுப்பின்னணிக்கும் பிரசித்தமாக அறியப்படுகிறது. வரலாற்றுப்புகழ்பெற்ற போர்த்துகீசிய கடற்பயணி ‘வாஸ்கோட காமா’ இந்த கடற்கரையில் 1498ம் ஆண்டில் முதன்முதலாக கால் பதித்ததாக சொல்லப்படுகிறது.
அவரது வருகையின் பின்விளைவுகளாக, ஐரோப்பிய நாடுகளுடனான கடல்வழி வாணிபம் தொடங்கியது மட்டுமல்லாமல், இந்தியாவின் சரித்திரம் திரும்ப எழுதப்பட்டு ஒரு காலனிய நாடாகவும் இந்தியா மாறியது குறிப்பிடத்தக்கது.
‘வாஸ்கோட காமா’ இந்த கடற்கரையில் கால் வைத்ததன் ஞாபகார்த்தச்சின்னம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அதில் –“ கப்பக்கடவு எனும் இந்த ஸ்தலத்தில் ‘வாஸ்கோட காமா’ 1498ம் ஆண்டு வந்திறங்கினார்” எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அமைதியான சூழலுடன் காட்சியளிக்கும் இந்த கடற்கரைப்பகுதியில் பாறைகள் அதிகமாக நிரம்பியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாறை அமைப்பில் கட்டப்பட்டுள்ள ஒரு சிறு கோயில் கடல் நீர் வரை நீண்டு அமைந்துள்ளது.
800 வருடங்கள் பழமையுடையதாக நம்பப்படும் இந்தக்கோயில் கப்பட் கடற்கரையில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கப்பட் கடற்கரைப்பகுதி ஆயுர்வேத சிகிச்சை முறைகளுக்காகவும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. ஏராளமான ரிசார்ட் தங்கும் விடுதிகளும் இந்த கடற்கரைப்பகுதியில் அணிவகுத்து காணப்படுகின்றன.
கோடையில் ஓய்வெடுப்பதற்கு மிகவும் பொருத்தமான இந்த சுற்றுலாத்தலத்தை மழைக்காலத்தில் தவிர்ப்பது அவசியமாகும்.



Click it and Unblock the Notifications