ஸ்ரீநகரிலிருந்து, சுமார் 145 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத், இந்தியாவின் பிரதான யாத்ரீக ஸ்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து, சுமார் 4175 அடி உயரத்தில் அமைந்துள்ள இத்தலம், இந்துக்கள் வணங்கும் அழிவுக் கடவுளான சிவபெருமானின் பக்தர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு, இயற்கையாக அமையப்பெற்றுள்ள பனியினாலான சிவலிங்கம், முக்கிய ஈர்ப்பு அம்சமாக திகழ்கிறது. இந்த யாத்ரீக ஸ்தலம் தன் பெயரை, அழிவற்ற என்ற பொருள் கொண்ட ‘அமர்’, மற்றும் கடவுள் என்பதைக் குறிக்கும் “நாத்”, ஆகிய இரு இந்து வார்த்தைகளிலிருந்து பெற்றுள்ளது.
இங்கு உலவும் ஒரு பிரபல நாட்டுப்புறக் கூற்றின் படி, சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவி, தன்னிடம் வெகு காலமாக, சொல்லாமல் மறைத்து வரும் மரணமில்லாமையின் ரகசியத்தைக் கூறும்படி, சிவனிடம் மன்றாடியதாகவும், அவர் பார்வதியை இமய மலையில், ஒரு ஆளரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, யாரும் கேட்டு விடாதபடி அந்த ரகசியத்தை பகிர்ந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
அவ்வாறு இமயமலைக்கு செல்லும்போது, சிவன் தன் தலையில் வீற்றிருக்கும் சந்திர பிறையை சந்தன்வாரியிலும், தன் வாகனமாகிய காளையை பஹல்கத்திலும், அதன் பின் தன் மகன், யானைமுகத்தோனாகிய கணேசரை மஹாகுணாஸ் மலையிலும், தன் சர்ப்பத்தை, ஷேஷ்நாக்கிலும், ஐம்பூதங்களை பஞ்சதரணியிலும், விட்டு விட்டு, பார்வதியை மட்டும் ஒரு குகைக்குள் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் அக்குகைக்குள் நெருப்பை உருவாக்கி, அங்குள்ள ஜீவராசிகள் யாரும் கேட்டுவிடாதபடி, அனைத்தையும் எரித்து சாம்பலாக்கினார். ஆனால், இரண்டு புறா முட்டைகள், மான் தோல் ஒன்றின் அடியில் இருந்ததனால் நெருப்பினால் தீண்டப்படாமல் இருந்ததை, அவர் கவனிக்கத் தவறிவிட்டார்.
சிவன், பார்வதியிடம் அந்த ரகசியத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவ்விரு முட்டைகளும், சத்தமின்றி பொரிந்து, அந்த ரகசியத்தை கேட்டுக் கொண்டிருந்தன.
அமர்நாத் குகைக்கு செல்லும் பயணிகள், இப்போதும் இரு புறாக்களை அங்கு பார்க்கலாம். இங்கு பிரபலமாக உள்ள நம்பிக்கையின் படி, அவ்வாறு சிவன் கூறிய ரகசியத்தை ஒட்டுக் கேட்ட அவ்விரு புறாக்களும், மறுபடி மறுபடி இவ்வுலகில் தோன்றி, அமர்நாத் குகையை தங்கள் நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இப்புகழ் வாய்ந்த வழிபாட்டு ஸ்தலம், 6-வது நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருத குறிப்பான, நிலமட புராணாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புராணா, காஷ்மீர் மக்களின், ஆச்சாரம் மற்றும் கலாச்சார வாழ்வியல் பாணிகளைப் பற்றிக் கூறுகிறது.
அமர்நாத், 34 பிசிஇ –யில், காஷ்மீர் அரியணையில் ஏறிய, பிற்காலத்தில் துறவறம் பூண்ட, ஆரியராஜ் மன்னருடனும் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. இம்மன்னர், படிப்படியாக தன் ராஜ உரிமைகளைத் துறந்துள்ளார்.
அவர், கோடைகாலங்களில், பனி லிங்கத்தை வழிபடுவதற்காக, இத்தலத்திற்கு அடிக்கடி வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அமர்நாத், ராஜதரங்கிணியிலும், அமரேஷ்வரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுல்தான் செயினுலாபுதீன், 1420 மற்றும் 1470 –க்கு இடைப்பட்ட காலத்தில், தன் அமர்நாத் வருகையின் போது, ‘ஷா கோல்’ என்றழைக்கப்படும் பாலம் ஒன்றைக் கட்டியுள்ளார்.
அமர்நாத்துக்கு வருகை தருவோர், சுமார் 3888 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகையை காணத்தவறாதீர்கள். இந்த குகை, இயற்கையாக உருவான பனி லிங்கத்தின் உறைவிடமாகத் திகழ்கிறது.
இந்த பனி லிங்கமானது, சந்திரனின் சுழற்சியைப் பொறுத்து, பிரகாசமாகவும், மங்கலாகவும், மாறி மாறி காட்சியளித்து, மே முதல் ஆகஸ்ட் வரை, அதிகபட்ச உயரத்தை எட்டுகிறது.
இந்தக் குகை, சுமார் 5000 வருடங்கள் பழமை வாய்ந்ததாகவும், இங்கு தான் சிவபெருமான், பார்வதி தேவியிடம், மரணமில்லாமை ரகசியத்தைப் பகிர்ந்ததாகவும், பரவலாக நம்பப்படுகிறது.
கணேசர் மற்றும் பார்வதி தேவியின் லிங்கங்கள் இரண்டும் கூட இங்கு காணப்படுகின்றன. இவ்விடம், இந்திய ராணுவம், இந்திய பாராளுமன்றப் படைகள், மற்றும் சிஆர்பிஎஃப், ஆகியவற்றினால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, அமர்நாத் குகைக்கு வர விரும்புவோர், உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது.
ஷேஷ்நாக் ஏரி, அமர்நாத்தின் மற்றுமோர் பிரபலமான ஈர்ப்பாகும். பஹல்கமிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ள இது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3658 அடி உயரத்தில் அமைந்துள்ளதனால், ஜூன் மாதம் வரை பனி மூடிய நிலையில் காணப்படுகிறது. அமர்நாத் யாத்திரைக்கு வரும் யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும், இந்த ஏரிக்கு, அதிக அளவில் வருகை தருகின்றனர்.
அமர்நாத் செல்ல விரும்புவோர், வான் வழியாகவோ அல்லது இரயில் வழியாகவோ, எளிதாக செல்லலாம். ஸ்ரீநகர் விமான நிலையமே இதற்கு அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும்.
இந்நிலையம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இரயில் மூலமாக அமர்நாத்தை அடைய விரும்புவோர், நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ள, ஜம்மு இரயில் நிலையத்திலிருந்து பிரயாணிக்கலாம்.
கோடைகளில், அமர்நாத்தின் சராசரி தட்பவெப்பநிலை, பெரும்பாலும் 15 டிகிரி செல்சியஸாகவே இருக்கும். ஆனால், குளிர்காலங்களில், வெப்ப நிலை -5 டிகிரி செல்சியஸுக்கும் குறைந்து, கடுங்குளிருடன் விளங்கும்.
பொதுவாக, அமர்நாத், நவம்பர் முதல் மார்ச் அல்லது ஏப்ரல் வரை, பனியால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதியில், வருடத்தின் எந்த சமயத்திலும் பருவ மழை பெய்யக்கூடும்; அவ்வமயங்களில் அமர்நாத் யாத்திரையும் தடைபடக் கூடும். மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டமே, இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டமாகும்.