இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இயற்கை கொஞ்சும் அழகுடன் வீற்றிருக்கும் காஷ்மீர் "பூமியின் சொர்க்கம்" என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட இமாலயத்திற்கும் பீர்பாஞ்சல் மலைப் பிரதேசத்திற்கும் இடையில் இவ்விடம் அழகுற அமைந்துள்ளது. உள்ளூர் கிராமிய கதைகளில் இவ்விடத்தில் காஷ்யபர் என்ற இந்து மதத் துறவி ஏரி ஒன்றை சுறுக்கி பிராமண இனத்தவருக்கு வாழ்விடம் அமைத்துக் கொடுத்தமையால் அவருடைய பெயரைத் தழுவி காஷ்மீர் என்று இவ்விடத்திற்கு பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இங்கு ஹஸ்ரத்பல் என்ற மசூதி கட்டாயம் காண வேண்டிய இடம். இவ்விடம் முன்பு இஷ்ரத் மஹால் அல்லது சாஜித் ஜஹானின் உல்லாச வீடு என்று அழைக்கப்பட்டது. இதில் கூறப்படும் சாஜித் ஜஹான் என்பவர் ஷாஜஹானுடய படையின் உயர்நிலை அலுவலராக இருந்தவர்.
இவ்விடம் தால் ஏரிக் கரையில் அமைந்துள்ளது. இவ்விடம் நபிகள் நாயகத்தின் முடி இருக்கும் இடமாக கருதப்படிகிறது. அவரது சீடர்கள் அவர்பால் கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் எடுத்துரைக்கும் இடமாகவும் உள்ளது.
இங்கு அடுத்து காண வேண்டிய இடம் சரார் ஷரீஃப். காஷ்மீரின் மிகவும் பழமை மாறா புனிதத்தன்மை வாய்ந்த இந்த இடம் இப்பொழுது காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.
புகழ்பெற்ற காஷ்மீரின் சுஃபி துறவியான உஷெய்க் நூர்-த்-தின் நினைவாக கட்டப்ப்பட்ட இப்புனிதத் தலம் ஸ்ரீ நகரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. துறவி உஷெய்க் நூர்-த்-தின் அவர்கள் புலால் உண்ணாமை, அகிம்சை மற்றும் சமுக இணக்கம் போன்ற சித்தாந்தங்களை எடுத்துரைத்தவர்.
அடுத்த முக்கிய சுற்றுலாத் தலத்தின் பெயர் ஷா ஹம்தன் மசூதி. ஜீலம் நதிக்கரையை அழகு படுத்தும் இவ்விடம் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலம். இங்கு காணப்படும் அழகிய தொங்கும் மணிகளும், செதுக்கப் பட்ட இலைகளும் பிரம்மிப்பூட்டும். இப்புனிதத் தலம் ஷா மிர் வம்ச அரசனான சுல்தான் கிகந்தரால் 1395 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
கீர் பவானி என்ற இடம் 1912 ஆம் ஆண்டு மஹாராஜா பிரதாப் சிங்கால் கட்டப்பட்டது. ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்விடத்தில் இந்து மத பெண் கடவுளான ராஞ்யா தேவி அருள் பாலிக்கின்றாள்.
இவ்விடத்தில் ஸ்ரீ ராமர் தன் நாட்டை விட்டு வரும் பொழுது தேவியை நினைத்து பிரார்த்தனை மேற்கொண்ட இடமாக நம்பப்படுகின்றது. இங்கு வரும் பக்தர்கள் தேவிக்கு காணிக்கையாக கீர் என்ற இந்திய இனிப்பு பதார்த்தத்தையும், பாலையும் கொடுப்பதால் இவ்விடம் கீர் பவானி என்ற பெயரை அடைந்தது.
ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமெனில் இங்கு காணிக்கை அளிக்கப்படும் வெள்ளை நிற பதார்த்தத்தின் நிறம் கருப்பாக மாறி விடும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.
அடுத்த புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தின் பெயர் சங்கராச்சாரியரின் கோவில். இவ்விடம் தாஹித் இ சுலைமான் என்ற மலைப்பிரதேசத்தின் உயரமான இடத்தில் அமைந்துள்ளது.
இன்னொரு புகழ்பெற்ற இடம் சூரிய கோவில், இங்கு பாஸ்கரன் என்ற பெயரில் சூரிய பகவான் அழைக்கப்படுகிறார்.இத்தலம் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது. சூரிய வம்சத்தை சேர்ந்த அரசர் லலிதாதித்யாவால் கட்டப்பட்ட இவ்விடம் அரசருக்கு பெரும் புகழை வாங்கிக் கொடுத்த இடங்களில் ஒன்று.
அடுத்த இடம் சிவ கோரியின் இயற்கைக் குகை. இவ்விடம் ரியேசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட டெஹ்சில் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் புகழே இங்கு அமைந்திருக்கும் இயற்கையாக உருவாகிய சிவலிங்கம்தான்.
இவ்விடம் ஜம்முவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்குகையின் மேற் கூரையில் இந்து மத பாம்பு கடவுளான ஆதிசேஷனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கும். குகையின் நடுப் பகுதியில் காணப்படும் துளையானது சிவனின் முடியப்பட்ட கூந்தலின் முடிச்சை அதாவது ஜடா முடியைக் குறிக்கிறது.
அடுத்து பார்க்க வேண்டிய அழகிய இடம் ”ஷாலிமர் தோட்டம்”.பேரரசர் ஜஹாங்கீர் தன் மனைவி நூர் ஜஹானுக்காக 1616 ஆம் ஆண்டு உருவாக்கிய இடமான ஷாலிமர் தோட்டத்தை இங்கு கண்டு களிக்கலாம்.
1628 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ”காதலின் பூங்கா” என்றழைக்கப்படும் ”ஃபைஸ் பக்ஷ்” என்ற மற்றுமொரு பூங்கா காஷ்மீருக்கு மேலும் அழகு சேர்க்கும் இடமாகும். இது அரச குடும்பப் பெண்களுக்கான மேல்தள பூங்கா ஆகும். இந்த பூங்காவின் நான்காவது தலம் தான் இருப்பதிலேயே அழகானது.
இங்கே இருக்கும் குளம், நடுவில் வைக்கப்பட்டிருக்கும் கருப்புக் கல்லால் ஆன கூடாரம், மின்னொளி அலங்காரம் மற்றும் மனமயக்கும் இசை போன்றவை அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும்.