புபனேஷ்வர் நகரத்தில் உள்ள மிகப்பெரிய கோயிலாக இந்த லிங்கராஜ் கோயில் வீற்றிருக்கிறது. பல காரணங்களுக்காக இந்த கோயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நகரத்திலுள்ள மிக தொன்மையான கோயில் எனும் பெருமை அவற்றுள் முதன்மையான ஒன்று.
இந்த கோயில் 10 அல்லது 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. புபனேஷ்வர் நகரத்தின் முக்கிய அடையாளச்சின்னமாகவும் பாரம்பரிய வரலாற்றுச்சின்னமாகவும் இந்த லிங்கராஜ் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது.
சிவனின் வடிவமான ஹரிஹரனுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் இந்தியாவிலுள்ள மிகச்சிறந்த ஹிந்துக்கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 55 மீ உயரம் உள்ள இந்த கோயிலின் ஒவ்வொரு அங்குலப்பரப்பிலும் நுணுக்கமான சிற்பச்செதுக்கல்கள் வெகு விஸ்தாரமாக பொதிக்கப்பட்டிருக்கின்றன.
அதிநவீன கட்டிடங்களின் வடிவமைப்புகளுக்கெல்லாம் சவால் விடும்படியான நேர்த்தியுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் அக்காலத்திய இந்திய மண்ணின் நாகரிக மேன்மைக்கு சான்றாக வீற்றிருக்கிறது.
தற்போதைய நவீன யுகத்திலும் சில கடுமையான விதிமுறைகள் அல்லது மரபுகள் இக்கோயிலில் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதாவது, இன்றும் இந்த கோயிலில் ஹிந்துக்கள் அல்லாதாருக்கு அனுமதி இல்லை.
இருப்பினும் சுற்றுச்சுவரை ஒட்டிய ஒரு பீடம் அமைக்கப்பட்டு அதிலிருந்தபடி மற்றப்பிரிவினர் கோயிலை தரிசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வருடம் முழுதும் இந்த கோயிலுக்கு யாத்ரீகர்களும், பயணிகளும் விஜயம் அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்த வண்ணம் உள்ளனர். இந்திய வரலாற்று ஆர்வலர்கள், கட்டிடக்கலை ரசிகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில் இது.