பழைய மோதி தமன் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த ‘அவர் லேடி ஆஃப் ரோசரி’ சேப்பல் ஆலயம் போர்த்துக்கீசியர்களால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
இது தமன் நகரத்திலுள்ள புராதனமான மதச்சின்னங்களில் ஒன்றாகும். காதிக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சதுர வடிவ அமைப்பில் வீற்றிருக்கும் இந்த தேவாலயத்தில் முற்காலத்தை சேர்ந்த போர்த்துகீசிய மக்களின் கல்லறைகளும் காணப்படுகின்றன.
வெளிப்புறத்தில் சாதாரண தோற்றத்துடன் காட்சியளித்தாலும் உள்பகுதியில் கண்கவரும் அலங்கார அம்சங்களை இந்த புராதன ஆலயம் கொண்டிருக்கிறது.
பெரும்பாலும் மரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில் சித்திரப்பொறிப்புகள் மற்றும் ஓவியக்காட்சிகள் போன்றவை போர்த்துகீசிய பாணியில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆலயத்தின் சுவர்ப்பகுதிகளில் தங்க நிற தேவதை உருவங்களும் பொதிக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்து தனது சீடர்களுடன் வீற்றிருக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு மரச்சட்டகத்தையும் இங்கு பார்வையாளர்கள் காணலாம்.
ஒரு முக்கிய சிறப்பம்சமாக இந்த ஆலயத்தின் உட்கூரைப்பகுதியில் தங்க மலர் இதழ்கள் போன்ற வண்ணமயமான அலங்கார அமைப்பு காணப்படுகிறது.
‘மேரி ஆஃப் ரோசரி’ சிலை இந்த ஆலயத்தின் பீடப்பகுதியில் நிறுவப்பட்டிருக்கிறது. சிவாஜி தலைமையிலான மராத்தாப் படைகளிடமிருந்து தப்பிவித்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த சிலையை போர்த்துகீசியர்கள் நிர்மாண்த்ததாக சொல்லப்படுகிறது.