அம்பா நதிக்கரையில் பாலி மற்றும் மஹாத் எனப்படும் இரண்டு அஷ்டவிநாயக் கோயில்களுக்கிடையே இந்த துர்ஷேத் எனும் அமைதியான கிராமம் அமைந்துள்ளது. இது 42 ஏக்கர் அளவில் பரந்து காணப்படும் ஒரு வனப்பகுதியின் அங்கமாக உள்ளது.
சஹயாத்ரி மலைகளின் மடியில் உருவாகியிருக்கும் இந்த கிராமம் நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி கோபோலி எனும் ஊருக்கு அருகில் உள்ளது. இந்த சுற்றுலாத்தலம் மா, மற்றும் மாஹு மரங்கள் அடர்ந்த ஒரு பசுமையான தோப்புப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. நகரவாசிகள் சற்றே இயற்கையின் மடியில் இளைப்பாறுவதற்கேற்ற சிற்றுலாத்தலமாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது.
மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களுக்கு வெகு அருகே அமைந்திருப்பதால் அந்நகர மக்கள் இந்த சிற்றுலாத்தலத்தை வெகுவாக விரும்புகின்றனர்.
துர்ஷேத் – ஒரு பசுமைக்கிராமம்
துர்ஷேத் கிராமம் சஹயாத்ரி மலைகளின் அற்புதமான அழகை தரிசிக்க உகந்த ஸ்தலமாக இருப்பதோடு, இங்குள்ள வனப்பகுதிகளின் இயற்கை நடைப்பயணம் மேற்கொள்ளும்போது பலவகையான பறவைகளையும் பார்த்து மகிழும் வகையில் உள்ளது.
பசுமைக்காட்சிகள் சூழ்ந்த இந்த நடைபாதைகளில் செல்லும்போது பலவிதமான அரிய பறவைகளின் ஒலிகள் நம் மனதில் மகிழ்ச்சியாக நிரம்புகின்றன. மேலும் மாசற்ற தூய்மையான காற்றும் குளுமையும் நம்மை தழுவி ஒரு விதமான சாந்த நிலையையும் இங்குள்ள சூழல் தருகிறது.
துர்ஷேத் கிராமம் குளுமையான காற்றை அனுபவிக்கவும் வானத்தில் நட்சத்திரங்களின் ஜொலிப்பை பார்த்து ரசிக்க மிகவும் ஏற்ற இடமாகும். மழைக்காலத்தில் இங்கு விஜயம் செய்தால் நாம் ஈர மண்ணின் வாசனையையும் இயற்கையில் எழிலையும் மிக அற்புதமாக அனுபவிக்கலாம்.
துர்ஷேத் ஸ்தலத்தின் விசேஷ அம்சங்கள்
தன் பிரத்யேக இயற்கை அமைப்பு காரணமாக துர்ஷேத் கிராமம் மலையேற்றம் மற்றும் காட்டுச்சுற்றுலா போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது. மேலும், இங்குள்ள பலி கணபதி கோயில் மற்றும் மஹாத் கணபதி கோயில் இரண்டும் ஆன்மீக யாத்ரீகர்கள் விரும்பி தரிசிக்கும் கோயில்களாக அமைந்துள்ளன.
இந்த துர்ஷேத் கிராமம் பற்றிய ஒரு அதிகம் அறியப்படாத தகவல் இது சிவாஜி மஹாராஜ் கர்தலாப் கானை எதிர்த்து போரிட்ட உம்பர்கண்ட போரின் போர்க்களமாக இருந்துள்ளது என்பதாகும். துர்ஷேத் கிராமம் விமானம். ரயில் மற்றும் சாலை மார்க்கமாக்க எளிதில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.