ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 38 கி.மீ தூரத்தில், பிரசித்தமான ‘சுற்றுச்சூழல் இயற்கை’ சுற்றுலாத்தலமாக விளங்கும் கங்கேர் வேலி தேசிய பூங்கா வளாகத்தின் உள்ளே இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
சட்டிஸ்கரில் அமைந்திருக்கும் அற்புதமான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. முகாபஹார் ஆற்றின் பாதையில் உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி 100 அடிக்கும் மேற்பட்ட உயரத்திலிருந்து விழுகிறது.
இந்த ஆறு நீர்வீழ்ச்சியிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு ஏரியில் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீர்வீழ்ச்சியை சுற்றிலும் செழிப்பான வனப்பகுதி காணப்படுகிறது.
சித்ரகொடே நீர்வீழ்ச்சிக்கு அடுத்ததாக சுற்றுலாப்பயணிகளை அசர வைக்கும் ஒரு பிரம்மாண்ட இயற்கை அதிசயமாக இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
பொதுவாக நீர்வீழ்ச்சிகளை இரு கரைப்பகுதியின் உயரத்தில் நின்று பார்த்து ரசிக்க முடியும் என்றால் இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி அப்படியல்ல. நீர்வீழ்ச்சியின் உள்ளே அடுக்கடுக்காக அமைந்திருக்கும் படிகள் மற்றும் பாறைத்தளங்கள் போன்ற அமைப்புகள் வழியாக பாதாளத்தின் உள்ளே செல்வது போன்று பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சி விழும் அடித்தளத்துக்கே செல்லலாம்.
இப்படி கீழிறங்கி செல்லும்போது வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் காட்சியளிக்கும் மினுமினுக்கும் சிலேட்டுப்பாறைகள் வழியே அருவிகள் விழுவதை மிக அருகே தரிசிக்க முடியும். மெய் சிலிர்க்க வைக்கும் இந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.
தீரத்கர் நீர்வீழ்ச்சியின் உள்ளே அதன் அடிவாரத்துக்கு நாம் சென்றபின் இயற்கையின் பிரம்மாண்டம் சுற்றிலும் சூழ்ந்து நம்மை உள்வாங்கிக்கொண்டது போன்ற உணர்வு நம்மை ஆக்கிரமிக்கிறது.
சுற்றிலும் எழும்பியிருக்கும் பாறை அமைப்புகளின் எழுச்சியும் , அவற்றின் வழியே வெவ்வேறு அளவுகளில் வழிந்து வெண்ணிற நுரையுடன் சிதறும் நீரும் நம்மை திகைத்து தடுமாற வைத்து விடுகின்றன.
மனக்கசடுகளை எல்லாம் துடைத்து அகற்றி புதிதாய் பிறந்தது போன்ற உணர்வை நம்முள் ஏற்படுத்தி நம்மை திருப்பி அனுப்புகிறது இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி.
இயற்கையின் தரிசனம் என்றால் அது இதுதான் என்று சொல்லும்படியாக இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி நம்மை பாதாளத்துக்குள் இட்டுச்சென்று இயற்கையின் பிரம்மாண்டத்தை காட்சிப்படுத்துகிறது.
இந்த நீர்வீழ்ச்சியின் அடித்தளத்தை நோக்கி செல்லும் பாதையில் சிவன் கோயில் ஒன்று அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பு. நம் முன்னோர்கள் ஆதியிலேயே இந்த அற்புத நீர்வீழ்ச்சி ஸ்தலத்தின் அமைப்பையும் அதன் எழிலையும் பெருமைப்படுத்தும் வண்ணம் இந்த கோயிலை உருவாக்கியிருப்பதும் வியப்புக்குரியது.
நீர்வீழ்ச்சியின் அடித்தளத்துக்கு செல்லும் அடுக்குத்தளங்களின் மத்தியில் மலை விளிம்பில் வீற்றிருக்கும் திபெத்தியக்கோயில் போன்று இந்த சிவ-பார்வதி கோயில் காட்சியளிக்கிறது.
இந்தியாவில் விஜயம் செய்ய வேண்டிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை எழிற்தலங்களில் இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சியும் ஒன்று என்பதில் ஐயமே இல்லை.
இதனுடன் சித்ரகொடே நீர்வீழ்ச்சி, கைலாஷ் குகைகள், கொடும்சர் குகைகள் ஆகிய அம்சங்களையும் சேர்த்தால் இவை யாவுமே சத்திஸ்கர் மாநிலத்தின் இயற்கைப்பொக்கிஷங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.