பப்பர் ஆற்றின் கரையில் கடல் மட்டத்திலிருந்து 1901 மீ உயரத்தில் இந்த ஜுப்பல் எனும் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. 288 சதுர மைல் பரப்பில் உள்ள இந்த பிரதேசம் பிரமிக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளால் நிரம்பி வழிகிறது. 1814-1816ம் ஆண்டுகளில் நடைபெற்ற கூர்க்கா போராட்டங்களுக்கு பின் இது தனது சுதந்திர அந்தஸ்தை பெற்றது. வரலாற்றுக்குறிப்புகளின்படி கரம் சந்த் ராஜாவால் இந்த ஜுப்பல் தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னாளில் ராஜா திக் விஜய் சிங் ஆட்சியின்போது 1948ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் இது இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது.
இப்பகுதியிலுள்ள மலைச்சரிவுகள் செழுமையான பச்சை ஆப்பிள் தோட்டங்கள் மற்றும் தேவதாரு மரங்களைக்கொண்ட அடர்ந்த காடுகள் போன்றவற்றால் நிரம்பியுள்ளன.
சந்திர நஹான் ஏரி மற்றும் ஜுப்பல் பேலஸ் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். பப்பர் ஆறு உருவாகும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் சந்திர நஹான் ஏரி பயணிகளுக்கு மீன் பிடிக்கும் பொழுதுபோக்கில் ஈடுபட வாய்ப்பளிக்கிறது.
ஜுப்பல் பேலஸ் எனப்படும் அரண்மனையில் பயணிகள் அக்கால ராஜரீக உன்னதங்களின் அடையாளங்களை தரிசிக்கலாம். ‘ராணாஸ் அபோட்’ என்றும் அழைக்கப்படும் இந்த அரண்மனை சீன கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது.
ஜுப்பல் நகரிலுள்ள ஹட்கேஷ்வரி கோயில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வழங்கி வரும் நாட்டுப்புற கதைகளின்படி, இக்கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இருப்பினும் நிபுணர்கள் கருத்துப்படி இது கி.பி 800 மற்றும் 1000 மாவது ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும்19ம் நூற்றாண்டில் ஜுப்பல் அரசவம்சத்தினரால் இக்கோயில் புதுப்பிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
ராம்பூர் ஜத்தார் எனும் திருவிழா ஜுலை மாதத்தில் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஹெமிஸ் என்ற மற்றொரு திருவிழாவும் இங்கு பிரசித்தம். திபெத்திய பௌத்த மார்க்கத்தின் முக்கியமான குருவான பத்மசாம்பவாவுக்காக ஹெமிஸ் திருவிழா நடத்தப்படுகிறது. பத்மசாம்பவா குரு ‘சிங்கம் போல் உறுமும் குரு’ என்றும் அறியப்படுகிறார்.
ஜுப்பல் சுற்றுலாத்தலம் நாட்டின் பிற பகுதிகளுடன் நல்ல முறையில் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.குளிர்காலமும், வேனிற்காலமும் இப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன. இக்காலத்தில் சுற்றுலாவுக்கேற்ற இனிமையான பருவநிலை நிலவுகிறது.