சீமாந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் லேபாக்ஷி எனும் அழகிய குக்கிராமம் அதன் மதச் சிறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோயில், விஷ்ணு கோயில், வீரபத்ரா கோயில் ஆகிய மூன்று ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இவைதவிர ஆமையின் முதுகு போல காட்சியளிக்கும் சிறிய குன்று ஒன்று சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. கூர்ம சிலா என்று அழைக்கப்படும் இந்தக் குன்றில் ஸ்ரீராமர் கோயில், ரகுநாதர் ஆலயம், வீரபத்ரர் ஆலயம், பாபனாதேஷ்வரா ஆலயம், துர்கா கோயில் போன்ற கோயில்கள் அமைந்திருக்கின்றன.
லேபாக்ஷி கிராமத்தில் அமைந்திருக்கக்கூடிய ஒவ்வொரு கோயிலும் விஸ்வகர்மா பிராமணர்களின் கலை நுணுக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள் புகழ்பெற்ற விஸ்வகர்மா சிற்பியான அமரஷில்பி ஜனாக்ஷரி என்பரின் மேற்பார்வையில் படைக்கப்பட்டவையாக கருதப்படுகின்றன.
ஆனால் உண்மையில் இந்த சிற்பங்களை உருவாக்கியதில் மிகச் சிறந்த சிற்பிகளான ககோஜு, மோரோஜு ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. மேலும் இந்தக் கோயில்களின் சுவர்களில் இராமாயணம் மற்றும் மகாபாரத காவியங்களின் காட்சிகளை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
அதோடு இயற்கை வண்ணங்களை கொண்டு கோயில் மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவைதவிர தொங்கும் தூண், பாறைச் சங்கிலி, துர்கா பாதம், வாஸ்து புருஷ், பந்தயப் பெண் ஆகிய சிறப்பம்சங்களுக்காக இந்தக் கோயில்கள் தனித்துவமாக அறியப்படுகின்றன.
லேபாக்ஷி கிராமத்தின் வெப்பம் மிகுந்த கோடை காலத்தை தவிர மற்ற காலங்களில் வானிலை இதமானதாகவே இருக்கும். இந்த கிராமத்தில் விமான நிலையமோ, ரயில் நிலையமோ இல்லாத காரணத்தால் சாலை வழியாக லேபாக்ஷி கிராமத்தை அடைவதுதான் சிறந்த போக்குவரத்து மார்க்கமாக இருக்கும்.