மீராமரில் இருந்து தெரியும் அரபிக் கடலின் அற்புதமான தோற்றம் எவரையும் எளிதில் சொக்க வைத்து விடும். அதன் காரணமாகவே இந்தக் கடற்கரைக்கு 'கடலின் அழகிய தோற்றம்' எனும் பொருள் படும்படி மீராமர் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்தக் கடற்கரை மாண்டோவி நதி கடலில் கலக்கும் இடத்தில், பனாஜியிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.
மீராமர் பீச் 2 கிலோமீட்டர் பரப்பில் பரந்து விரிந்து கிடப்பதால் மாலையில் அப்படியே கடற்கரையில் ஒரு சிறு உலா செல்வது மனதிற்கு இதமாக இருக்கும். மேலும் நிலவொளியில் தகதகக்கும் மணற்பரப்பும், வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களிலிருந்து புறப்பட்டு வரும் இளந்தென்றலும் சேர்ந்து இந்திர லோகத்தில் இருப்பது போன்ற ஒரு பிரம்மையை உங்களுக்குள் ஏற்படுத்தி விடும்.
மீராமர் பீச்சுக்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் வரும் புலம்பெயர் பறவையினங்களை போலவே உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பயணிகளின் கூட்டமும் அதிகம். மேலும், இந்தக் கடற்கரையிலிருந்து வெகு அருகிலேயே டோனா பௌலா, அகுவாடா கோட்டை போன்ற புகழ்பெற்ற சுற்றுத் தலங்கள் அமைந்திருக்கின்றன.
மீராமர் பீச்சுக்கு விமான நிலையத்திலிருந்தோ, பனாஜி போன்ற கோவாவின் மற்ற பகுகளிளிருந்தோ, பேருந்து மற்றும் கார்களின் மூலம் சுலபமாக வந்து விடலாம். அதோடு வரும் வழியில் எண்ணற்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதால் புதிதாக இந்த இடத்திற்கு வருபவர் கூட சிக்கல், சிரமம் ஏதுமில்லாமல் விரைவாக மீராமர் பீச்சுக்கு வந்து சேரலாம்.