வடக்கு கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளான கேண்டலிம் மற்றும் பாகா கடற்கரைகளுக்கு மத்தியில் கலங்கூட் பீச் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. இந்தக் கடற்கரையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி மிகவும் விசாலமானது.
இந்த பார்க்கிங் பகுதியை ஒட்டி வரிசையாக சில கடைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த கடைகளில் ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்களை மலிவு விலைகளில் வாங்கலாம். அதோடு கோவா வந்ததின் நினைவாக நீங்கள் ஏதேனும் வாங்க நினைத்தால், அவற்றையும் இந்தக் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம்.
கலங்கூட் பீச் உலர்ந்த பழங்களுக்காகவும், அதன் வியாபாரத்துக்காகவும் கோவாவில் மிகவும் பிரசித்தம். அதிலும் இங்கு கிடைக்கும் வறுத்த முந்திரி மற்றும் உப்பு தடவிய முந்திரி பருப்புகளுக்கு கடும் கிராக்கி.
கலங்கூட் பீச் நீர் விளையாட்டுகளுக்காகவும் பயணிகளிடையே பிரபலம். இந்தக் கடற்கரைக்குள் நீங்கள் காலெடி எடுத்து வைத்த தருணத்திலிருந்து உங்களை ஏராளமான தரகர்களும், முகவர்களும் அணுகுவார்கள். அவர்களிடம் பணத்தை செலுத்தி விட்டு பனானா ரைட், வாட்டர் பைக் ரைட், பாராசைலிங், படகு சவாரி என்று நீங்கள் உங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம்.
அதிலும் குறிப்பாக பாராசைலிங்கில் நீங்கள் வானில் பறக்கும்போது அஞ்சுனா பீச்சில் உள்ள சௌஸா லோபோ என்ற உணவகத்தின் அழகிய தோற்றத்தையும், கேண்டலிம் கடற்கரையின் கண்கொள்ளா காட்சியையும் கண்டு ரசிக்கலாம்.
அதோடு தரையிறங்கிய பின் சௌஸா லோபோவில் நண்டுக்கறி உண்ண மறக்காதீர்கள். இந்த சௌஸா லோபோவில் கிடைக்கும் நண்டுக்கறி போல நீங்கள் உலகில் வேறெங்கும் சாப்பிட்டிருக்க முடியாது. அதன் காரணமாகவே இந்த உணவகத்துக்கு வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
நீங்கள் இந்தக் கடற்கரையில் சிறிது நேரம் காலாற நடக்க விரும்பினால், அப்படியே பாகா பீச்சுக்கு நடந்து சென்று பிரிட்டோஸில் இரவு உணவை முடித்துக் கொள்ளலாம். மாறாக அகுவாடா கோட்டைக்கு வெகு அருகில் இருக்கும் தாஜ் விவண்டாவின் 'தி வில்லேஜ்' ஹோட்டலில் சென்று கூட உணவருந்தலாம்.
கலங்கூட் பீச்சில் நீங்கள் தங்க விரும்பும் பட்சத்தில் இங்கு ஏராளமான ரிசார்ட்டுகள் இருக்கின்றன. இந்த ரிசார்ட்டுகளிலிருந்து பார்க்கும் போது கலங்கூட், கேண்டலிம், மற்றும் பாகா கடற்கரைகளின் பேரழகினை பரிபூரணமாக ரசிக்கலாம்.
மேலும் கலங்கூட் பீச்சை பனாஜி உள்ளிட்ட கோவாவின் மற்ற இடங்களிலிருந்து அடைவது வெகு சுலபம். அந்த பகுதிகளிலிருந்து நீங்கள் காரில் கலங்கூட் வரும் பட்சத்தில், ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் அகலமான அறிவிப்புப் பலகைகள் உங்களுக்கு உதவி செய்யும்.