கோவாவின் புகழ்பெற்ற தேவாலயமாக இன்று மக்களிடையே பிரபலமாக அறியப்படும் பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ், ஒரு காலத்தில் செயின்ட் ஃபிரேன்சிஸ் சேவியர் எனும் கிறிஸ்தவ மதகுருவின் இல்லமாக இருந்தது. இந்த மதகுரு மக்களின் தீராத நோய்களையெல்லாம் தீர்க்கவல்ல அதீத சக்தியை படைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.
அதன் காரணமாகவே இவருடைய பூத உடலை இன்றும் பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் தேவாலயத்தில் பாதுகாத்து வருகிறார்கள். மேலும், மதகுருவின் உடலை பொதுமக்கள் பார்பதற்கு பத்து வருடத்துக்கு ஒருமுறை அனுமதிக்கப்படுவார்கள்.
அப்படி கடைசி முறையாக மதகுருவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது 2004-ஆம் ஆண்டு. அதோடு இந்த தேவாலயத்துக்கு மத வேறுபாடின்றி உலகம் முழுவதிலுமிருந்தும் ஏராளமான பக்தர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
தேவாலயத்தின் வரலாறு
பாம் ஜீசஸ் என்ற பதத்திற்கு நல்ல ஜீசஸ் அல்லது குழந்தை ஜீசஸ் என்று பொருள். இந்த தேவாலயம் 400 ஆண்டுகளுக்கு முன்பு 1605-ஆம் ஆண்டு, அருட்தந்தை அலெக்ஸோ டி மெனிசஸ் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
இதனுள்ளே காணப்படும் நுண்ணிய கலை வேலைப்பாடுகள் செயின்ட் ஃபிரேன்சிஸ் சேவியர் அவர்களுடைய வாழ்கையின் அற்புதங்களை கதை கதையாக நமக்கு சொல்லும். மற்றபடி அவர் சம்பந்தமான ஓவியங்களும், பொருட்களும் அலங்கரிக்கபட்ட பேழையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இங்குள்ள முக்கால்வாசி கல்லறைகள், கியோவன்னி பட்டிஸ்டா ஃபோகினி என்ற 17-ஆம் நூற்றாண்டு சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை. அதோடு இந்த தேவாலயம் முழுக்க ஜிஸ்வைட் கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் தேவாலயத்தின் கூரை முழுவதும் துத்தநாகக் பூச்சு பூசப்பட உள்ளது. இதனால் தேவாலயத்துக்குள் சூரிய ஒளி புகுவது தடுக்கப்படுவது மட்டுமில்லாமல், பச்சை நிறக் கூரை பார்பதற்கும் அழகாக இருக்கும். மேலும், இங்கேயே வாழும் கன்னியாஸ்திரி மற்றும் பாதிரியார்களுக்கும், பக்தர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
ஆட்சேபிக்கப்பட்ட இல்லம்
பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் தேவாலயத்தின் வளாகத்துக்குள்ளேயே அமைந்திருக்கும் இந்த இல்லம் 1585-ஆண்டு, அதாவது தேவாலயம் கட்டப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த இடம் அந்த காலத்திலிருந்தே ஜிஸ்வைட் மதப் பிரசாரக் குழுவினரின் செயல்பாடுகளுக்கு அலுவலகம் போன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கட்டிடம் ஆட்சிப் பேரவையின் கடும் எதிர்ப்பை மீறியே கட்டப்பட்டிருக்கிறது.
அதோடு ஆட்சிப் பேரவையின் எதிர்ப்பை சிறிதும் பொருட்படுத்தாமல் ஜிஸ்வைட் குழுவினர் இந்த சிறிய தேவாலயத்தில் ஒரு நாள் இரவு மக்களை அழைத்து தொழுகையும் நடத்தியிருக்கின்றனர். எனினும் இன்று வரையிலும் பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் தேவாலயத்துக்கு வரும் கூட்டத்தைப் போலவே இங்கும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் தேவாலயத்தை எப்படி அடைவது?
பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் தேவாலயம் கோவா தலைநகர் பனாஜியிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருப்பதால், மார்கோ அல்லது வாஸ்கோடகாமா நகரத்திலிருந்து வாடகை கார்களின் மூலம் சுலபமாக பாம் ஜீசஸ் தேவாலயத்தை அடைந்து விடலாம்.
அதோடு பாகா, கலங்கூட், கேண்டலிம் கடற்கரைகளிலிருந்து இந்த தேவாலயத்துக்கு வருவதும் எளிதான காரியமே. இருப்பினும் உங்களிடம் சொந்த கார் இருந்தால் சிறப்பாக இருக்கும்.