பழைய கோவா, கோவா தலைநகர் பனாஜிக்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் போர்த்துகீசிய காலத்தில் கோவாவின் தலைநகரமாக இருந்தது. வெல்ஹா கோவா என்றும் அழைக்கப்படும் இந்த நகரை 15-ஆம் நூற்றாண்டில் பீஜாப்பூர் நிர்வாகம் நிர்மாணித்தது. அதன் பின்னர்தான் இது போர்த்துகீசியர்களின் வசம் சென்றது.
பழைய கோவாவில் இன்று மிகவும் சொற்ப அளவிலேயே மக்கள் வசித்து வருகின்றனர். மாறாக முந்தைய காலங்களில் இந்த நகரம் கோவாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் 17 நூற்றாண்டில் நகரம் முழுவதும் ஒரு வித தோற்று நோய் பரவ ஆரம்பித்ததால் ஏராளமான மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயரத் துவங்கினர்.
அதன் காரணமாகவே அன்றிலிருந்து இந்த இடம் பழைய கோவா என்ற பொருளில் வெல்ஹா கோவா என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கோவாவின் தலைநகரமாக மாறிய பனாஜி, புதிய கோவா என்று அறியப்பட்டது.
பழைய கோவாவின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது தொன்மையான தேவாலயங்களே ஆகும். அதிலும் போர்த்துகீசியர்களால் 17-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட செயின்ட் ஃபிரான்சிஸ் தேவாலயமும், அதன் செயின்ட் மைக்கேல் சிலையும் பயணிகளிடையே வெகுப்பிரபலம். இந்த தேவாலயத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தூண்கள், செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பால் சிலைகள் என்று அனைத்தும் அற்புதப் படைப்புகள்.
பழைய கோவாவில் தேவாலயங்களை தவிர எண்ணற்ற பொழுதுபோக்கு தலங்களும் உள்ளன. அதிலும் முக்கியமாக செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கரம்போலிம் ஏரி, சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் இடங்களில் ஒன்று.
இந்த ஏரி ஆயிரமாயிரம் புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாக இருந்து வருகிறது. இது கர்மாலி ரயில் நிலையத்துக்கு வெகு அருகிலேயே இருப்பதால், இந்த ஏரியை அடைவதும் சுலபம்.
பழைய கோவாவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மற்றொரு இடம் டைவார் தீவு. 16-ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துகீசிய அரசு சில மதப் பிரச்சாரகர்களை பணியில் நியமித்து கிறிஸ்தவ மதத்தை கோவாவில் பரப்ப ஆரம்பித்தது. அந்தக் காலங்களில் எண்ணற்ற ஹிந்து கோயில்கள் நிறைந்த புனிதத் தலமாக டைவார் தீவு விளங்கி வந்தது.
ஆனால் கிறிஸ்தவ மயமாக்கலின் சக்திக்கு முன்னால் அந்த நகரால் தாக்குபிடிக்க முடியவில்லை. எனினும் டைவார் தீவு அதன் நெல் சாகுபடிக்காகவும், சொக்க வைக்கும் இயற்கை அழகுக்காகவும் பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகிறது.
டைவார் தீவை பனாஜி நகரிலிருந்து ஃபெர்ரி அல்லது படகின் மூலமாக சுலபமாக அடைந்து விடலாம். அதோடு இந்தத் தீவை போண்டேராம் மற்றும் போடேகர் திருவிழாக்களின் போது அணுகுவது சிறப்பாக இருக்கும். அந்த சமயங்களில் இசை, அணிவகுப்பு, வண்ண வண்ண ஆடைகள் என்று டைவார் தீவே கோலாகலமாகவும், குதூகலமாகவும் காட்சியளிக்கும்.
இயற்கை அழகினையும், தேவாலயங்களையும் சுற்றிப் பார்த்தது போதும் என்று எண்ணுபவர்களுக்கு பழைய கோவாவில் ஒரு சில கட்டிடக் கலை அற்புதங்கள் காத்துக்கிடக்கின்றன.
இந்த நகரில் 16-ஆம் நூற்றாண்டில், வாஸ்கோடகாமாவின் சாதனைகளை கௌரவிக்கும் பொருட்டு வைஸ்ராய்'ஸ் ஆர்ச் என்ற நினைவுச் சின்னமொன்று கட்டப்பட்டுள்ளது. இது ஒருகாலத்தில் பழைய கோவாவின் நுழைவாயிலாக இருந்து வந்தது.
பழைய கோவாவை வாடகை கார்களின் மூலமாக சுலபமாக அடைந்து விடலாம். ஆனாலும் நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் செல்வது போல் சிறப்பானது வேறெதுவும் இல்லை.
ஏனெனில் பழைய கோவாவுக்கு செல்லும் வழி முழுக்க எண்ணற்ற இயற்கை காட்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. அதனால் ஒவ்வொரு இடத்திலும் உங்கள் வாகனத்தை நிறுத்தி பரிபூரணமாக அந்த இடங்களை சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை தவற விட்டு விடாதீர்கள்.