கோவாவின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான ரெய்ஸ் மகோஸ் கோட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் ரெய்ஸ் மகோஸ் தேவாலயம் மாண்டோவி நதிக்கரையிலே, வெண்ணிறத் தோற்றத்துடன் பேரழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த தேவாலயம்தான் பார்டேஸ் மாவட்டத்தில் தோன்றிய முதல் தேவாலயமாகும். அதுமட்டுமில்லாமல் அகுவாடா கோட்டைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே இது கட்டப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ரெய்ஸ் மகோஸ் தேவாலயம் 1555-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, செயின்ட் ஜெரோமுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி மூன்று மேதை அரசர்கள் என்ற பெயரில் திருவிழா ஒன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவை முன்பு ஃபிரேன்சிஸ்கன் துறவிகள் தலைமையேற்று நடத்தி வந்தார்கள். அப்போது அவர்களுடைய சமயக்குழு ஒன்று தேவாலயத்துக்கு கிழக்கே சற்று தொலைவில் செயல்பட்டு வந்தது.
ரெய்ஸ் மகோஸ் தேவாலயம் ஒரு ஹிந்து கோயிலின் மீது கட்டப்பட்டிருப்பதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த கோயிலின் சில சிற்பங்களும், கல்வெட்டுகளும் இன்னும் மிச்சங்களாகவும், ஆதாரங்களாகவும் ஆலயத்தின் வளாகத்தினுள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தேவாலயத்தின் புராதன வெண்ணிற வெளித்தோற்றத்திற்கு மாறாக இதன் உட்புறத்தோற்றம் வண்ணங்களால் சூழப்பட்டது. இதன் உட்சுவர்களில் மூன்று அறிஞர்களும் குழந்தை ஏசுவை பார்க்க பரிசுப் பொருட்களுடன் செல்வது போல ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
ரெய்ஸ் மகோஸ் தேவாலயத்தை போலவே போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ரெய்ஸ் மகோஸ் கோட்டையும் பயணிகளிடையே மிகப்பிரபலம். அதோடு இந்தக் கோட்டையில் இரண்டு போர்த்துகீசிய வைஸ்ராய்களின் சமாதிகள் இன்றும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
ரெய்ஸ் மகோஸ் தேவாலயம் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு செல்லும் வழியில், அந்தக் கடற்கரைகளுக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கிறது. இது தவிர பனாஜி, வாஸ்கோ, மார்கோ போன்ற தெற்கு கோவா பகுதிகளிலிருந்து வாடகை கார்கள் மூலம் சுலபமாக ரெய்ஸ் மகோஸ் தேவாலயத்தை அடைந்து விட முடியும்.