செயின்ட் ஃபிரேன்சிஸ் ஆஃப் அஸிஸி தேவாலயம் முதன் முதலாக 8 பிரான்சிஸ்கன் துறவிகளால் 1500-களில் கட்டப்பட்டது. அதன் பின்னர் 1661-ஆம் ஆண்டில் அந்த ஆலயம் இடிக்கப்பட்டு தற்போதுள்ள செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம் உருவாக்கப்பட்டது.
செயின்ட் ஃபிரேன்சிஸ் தேவாலயம் டஸ்கன் மற்றும் மனுலைன் கட்டிடக் கலைகளை பின்பற்றி செம்பூராங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்துக்கு மத பேதமின்றி உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரமாயிரம் பயணிகளும், புனித யாத்ரிகர்களும் வந்து செல்கின்றனர்.
செயின்ட் ஃபிரேன்சிஸ் தேவாலயத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் மிராக்கல்ஸ் சிலை இலங்கையின் ஜாஃப்னா நகரிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்த ஆலயம் பெரும்பாலும் கொரிந்தியன் கட்டிடக் கலை பாணியிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இதன் பிரதான பூஜை மாடம் மட்டும் பரோக்கி மற்றும் கொரிந்தியியன் பாணிகளின் கலவையில் உருவானது.
அதோடு இந்த பிரதான பூஜை மாடத்தில் செயின்ட் ஃபிரேன்சிஸ் ஆப் அஸிஸியின் வாழ்கையை விளக்கும் விதமாக ஓவியங்கள தீட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த மாடத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் உருவம் வரையப்பட்டிருப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
மேலும் இங்கு உள்ள சிலைகள் ஒவ்வொன்றின் கீழேயும் 'ஏழ்மை, பணிவு, கீழ்ப்படிதல்' உள்ளிட்ட செயின்ட் ஃபிரேன்சிஸ் அவர்களின் வாழ்க்கை தத்துவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
செயின்ட் ஃபிரேன்சிஸ் ஆஃப் அஸிஸி தேவாலயம் கர்மாலி ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் இருப்பதால் பனாஜி, வாஸ்கோ, மார்கோ உள்ளிட்ட தெற்கு கோவா பகுதிகளிருந்து வாடகை கார்கள் மூலம் தேவாலயத்தை சுலபமாக அடைந்து விடலாம்.
அதேபோல் தேவாலயத்துக்கு வடக்கு கோவா பகுதிகளிலிருந்தும் வாடகை கார் வசதிகள் இருக்கின்றன. ஆனால் அதற்கான கட்டணம் சற்று அதிகமாக இருக்கக்கூடும். மேலும் நீங்கள் தேவாலயம் வரும் வழியில் உள்ள ரிசார்ட்டுகளுக்கோ அல்லது ஃபெர்ரி சேவை மூலம் ரீபந்தர் நகருக்கோ பயணம் செய்து சுற்றிப் பார்க்கலாம்.