மஹாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்ஹாலா ஒரு முக்கியமான மலைநகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே மிகச்சிறிய நகரமாக அறியப்படுகிறது.
பாரம்பரிய பின்னணி
பன்ஹாலா நகரத்தின் வரலாறு நம்மை புகழ் வாய்ந்த மராத்தா சாம்ராஜ்ய மாமன்னர் சிவாஜி மஹாராஜ் காலத்திற்கு இட்டுச்செல்கிறது. இங்கு சிவாஜி மன்னர் 500 நாட்களை கழித்ததாக சொல்லப்படுகிறது. பன்ஹாலா பின்னாளில் 1827ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்துள்ளது.
பன்ஹாலா – வரலாற்று அம்சங்கள்
பன்ஹாலா கோட்டையானது ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இந்த கோட்டையிலுள்ள சஜ்ஜ கோதி என்றழைக்கப்படும் சிறைத்தண்டனைக் கூடத்திலிருந்து சிவாஜி தந்திரமாக தப்பிச்சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கோட்டையின் பிரதான வாயிலில் தீன் தார்வாசா என்றழைக்கப்படும் மூன்று கதவுகள் உள்ளன. இந்த வாயில் அமைப்பு இரட்டை வடிவமைப்பை கொண்டதாகவும், பிரம்மாண்டமாகவும், உயரமாகவும் காணப்படுகிறது. இந்த வாசல் வழியாக அதிரடியாக நுழைந்து ஆங்கிலேயர்கள் பன்ஹாலா கோட்டையை கைப்பற்றியுள்ளனர்.
அக்காலத்தில் தானியக்கிடங்காக பயன்படுத்தப்பட்ட அம்பர்கானா கோட்டையும் ஒரு முக்கியமான வரலாற்று சின்னமாக உள்ளது. மேலும், அருகாமையில் உள்ள சோமேஸ்வரர் கோயில் அக்கால ஆன்மீக மற்றும் மதப்பாரம்பரியத்துக்கு சான்றாய் அமைந்துள்ளது.
பன்ஹாலா மலையேற்றத்துக்கு உகந்த ஒரு ஸ்தலமாகவும் அமைந்துள்ளது. இயற்கை எழிலுடன் கூடிய அமைதியான, சுற்றுப்புற மாசற்ற ஒரு அற்புதமான சூழலுடன் இது காட்சியளிக்கின்றது. இறுக்கமான கான்கிரிட் காடுகள் போன்ற நகரச்சூழலிலிருந்து தப்பித்து இயற்கைச்சூழலில் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள இது மிகவும் ஏற்ற இடமாகும்.
நிறைய கோட்டைகள் அமைந்திருப்பதால் பன்ஹாலா மலை நகரம் மலையேற்றத்துக்கு ஏராளமான வாய்ப்புகளை அள்ளைத்தருகிறது. இயற்கை ரசிகர்கள் பன்ஹாலா ஸ்தலத்தில் அற்புதமாக காட்சியளிக்கும் பள்ளத்தாக்கின் அழகை மிகவும் விரும்புகின்றனர். அமைதியான அதேசமயம் பிரமிக்கவைக்கும் மலைநகரமாக இந்த பன்ஹாலா நகரம் திகழ்கிறது.
பன்ஹாலா – எப்போது, ஏன், எப்படி செல்லலாம்
சிறிய அதேசமயம் அழகான மலைநகரமான இந்த பன்ஹாலா வருடமுழுதுமே விரும்பத்தக்க இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது. கோடைக்காலம் அதிக உஷ்ணத்தை கொண்டிராமலும் குளிர்காலம் குளுமையுடனும் உள்ளது.
மழைக்காலம் இப்பகுதியை எழில் நிறைந்த பிரதேசமாக மாற்றுவதுடன் சுத்தமான காற்று, குளுமையான சூழல், பிரமிக்கவைக்கும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஈரத்தின் நனைந்த தொன்மையான கோட்டைகள் என்று பயணிகளை கவரும் அம்சங்களுடன் திகழ்கிறது. இருப்பினும் மழையை அவ்வளவாக விரும்பாத பயணி எனில் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் இங்கு வருகை தரலாம்.
பன்ஹாலா நகரமானது விமானம், ரயில், சாலை போன்ற எல்லா வழிகளிலும் எளிதில் சென்றடையும்படி போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. மஹாராஷ்டிராவின் ஒரு முக்கிய பெரிய நகரமான கோலாப்பூருக்கு அருகிலேயே அமைந்திருப்பது இதன் கூடுதல் விசேஷம்.
விமானத்தில் பன்ஹாலாவுக்கு செல்ல விரும்பினால் கோலாப்பூர் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து டாக்சி மூலமாக பன்ஹாலாவை அடையலாம். ரயில் அல்லது சாலை மார்க்கமாக செல்ல விரும்பினாலும் கோலாப்பூர் நகரம் ஒரு முக்கியமான இணைப்பு மையமாக உள்ளது. மஹாராஷ்டிரா மாநில நகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களுக்கு கோலாப்பூரிலிருந்து பேருந்துகளும் ரயில் சேவைகளும் ஏராளம் உள்ளன.
நம் இந்திய மன்னர்களின் மேன்மை பாரம்பரியம் இவற்றை எடுத்துரைக்கும் அம்சங்களை கொண்டிருக்கும் முக்கிய வரலாற்று ஸ்தலங்களில் ஒன்றாக இந்த பன்ஹாலா மலைநகரம் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது.
ஆங்காங்கே அமைந்திருக்கும் கோட்டைகள் மற்றும் அவற்றின் பின்னணியில் அற்புதமான இயற்கை எழில் காட்சிகள் போன்றவை இந்த ஸ்தலத்தை ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் ஆக்கியுள்ளன.
விடுமுறைச்சுற்றுலா செல்வதற்கு பன்ஹாலா மலைநகரம் சரியான தேர்வுதானா என்று நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் பன்ஹாலாவுக்கு விஜயம் செய்துவிட்டு உங்களுக்கு ஊர் திரும்பவே மனம் வராது. அப்படி ஒரு அற்புதமான வரலாற்று வாசனை மற்றும் இயற்கை எழில் இந்த பன்ஹாலா மலைநகரத்துக்கு வாய்த்திருக்கிறது.