மகாராஷ்டிராவின் குட்டி காஷ்மீர் என்று அழைக்கப்படும் டப்போலா கிராமம் மகாபலேஷ்வரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை காதலர்களின் கனவு தேசமாய் திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்துக்கு செல்லும் வழியெங்கும் எழில் வண்ண ஓவியமாய் இயற்கை காட்சிகள் காண்போரை பரவசப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்தை தேடி வரும் சாகசப் பிரியர்களுக்கு எண்ணற்ற சவால்களும், கிளர்ச்சியூட்டும் அனுபவங்களும் காத்துக்கிடக்கின்றன.
டப்போலாவின் மாசற்ற சுற்றுச்சூழல் அமைப்பு சுற்றுலா வரும் பயணிகளுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, முதியவர்கள் தங்கள் உடல் பலவீனங்களை மறந்து இளமை தெம்போடு வளம் வர ஏற்றதாக இருக்கும்.
இதுதவிர நீங்கள் நீர் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவராக இருப்பின், உங்களுக்கென்றே 90 கிலோமீட்டர் நீளம் பரந்து கிடக்கும் சிவசாகர் ஏரியில் நீந்தியோ, கயாக் என்னும் சிறுபடகில் சவாரி செய்தோ பொழுதை களிக்கலாம்.
அதோடு மோட்டார் படகுகளும், நீர் ஸ்கூட்டர்களும் உங்களுக்குள் இருக்கும் குழந்தைக்கு குதூகலமான அனுபவத்தை கொடுக்கும்.
டப்போலாவில் நடை பயணம் செல்ல விரும்புவோர் வஸோட்டா கோட்டைக்கு செல்வது சிறப்பாக இருக்கும். இந்த கோட்டையில் நடைபயணம் செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டும்.
வஸோட்டா கோட்டைக்கு படகில் வருவதும், அதன் பின் கோட்டையில் ஏறிச்செல்லும் அனுபவமும் சவாலானதாக இருக்கும்.
இதெல்லாம் வேண்டாம் வெறுமென நடந்து சென்று இயற்கை காட்சிகளை ரசிக்க விரும்பும் பயணிகள் ஸ்ட்ராபெரி தோட்டத்துக்கும், செடி வளர்ப்பு பண்ணைகளுக்கும் சென்று பொழுதை இன்பமயமாக களிக்கலாம்.
அப்படிச் செல்லும் போது முன்பனிக் காலத்தில் காஸ் பீடபூமியை போர்த்திக்கொண்டு வண்ணக்கோலம் படைக்கும் 150-க்கும் மேற்பட்ட பூவினங்களை கண்டு நீங்கள் பரவசமடைவது நிச்சயம்.