கணபதிபுலே எனும் இந்த கடற்கரை நகரம் கொங்கணக் கடற்கரைப்பகுதியில் உள்ளது. இந்தியாவின் கரிபீயன் கடற்கரை என்ற புகழையும் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை நகரம் மும்பையிலிருந்து 375 கி.மீ தூரத்தில் உள்ளது. நகரக் கலாச்சாரம் மற்றும் வணிகக் கலாச்சாரம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் தன் இயற்கை அழகைத் தக்க வைத்திருக்கும் இந்த கடற்கரை ஸ்தலம் ஒரு முக்கியமான விடுமுறை சுற்றுலாத்தலமாக புகழ்பெற்றுள்ளது.
ஆன்மீகம், கடற்கரை மற்றும் வரலாற்றுப்பின்னணி – ஒரே இடத்தில்!
சுயம்புகணபதி கோயில் எனும் இந்த கணபதிபுலே எனும் அமைதியான கிராமத்தின் பிரதான சுற்றுலா அம்சமாகும். இந்த கோயிலிலுள்ள கணபதி சிலை 400 வருடங்கள் பழமை வாய்ந்தத ஒற்றைக்கல் சிற்பமாகும்.
ஒவ்வொரு வருடமும் இந்த கணபதிக்கடவுளின் அருளை வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாத்ரீகர்களும் இங்கு விஜயம் செய்கின்றனர். கணபதிக்கடவுள் ஒரு ‘பஸ்சிம் த்வார் தேவதா’ என்பவராக அறியப்படுகிறார். கணபதிபுலே நகரில் வசிக்கும் மக்கள் யாவரும் இந்த கணபதிக்கடவுளால் காக்கப்படுவதாக ஐதீகம் நிலவுகிறது.
கணபதிபுலே பகுதியில் உள்ள கடற்கரை தூய்மையானதாகவும் மாசு மருவற்ற ஸ்படிகம் போன்ற நீருடனும் காட்சியளிக்கின்றது. பலவிதமான பசுமைத்தாவர வகைகளும் இந்த கடற்கரையை ஒட்டி காட்சியளிக்கின்றன.
மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் கடற்கரையை ஒட்டி அழகாக எழிலுடன் அமைந்துள்ளன. தூரத்திலிருந்து பார்க்கும் போதே இந்த பிரதேசம் முழுதும் ஒரு வண்ண ஓவியம் போன்று கண்களை கவர்கிறது.
ராய்காட் கோட்டை மற்றும் ராய்காட் கலங்கரை விளக்கம் இங்கு அருகிலேயே அமைந்துள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
கணபதிபுலேவுக்கு வருகை தரும் பயணிகள் இங்கு பிரசித்தமான உணவுவகைகளான அம்பாபோலி மற்றும் பனசபோலியை (உலர்ந்த மாம்பழ அப்பளம் மற்றும் பலாப்பழ அப்பளம்) சுவைக்கத் தவறக்கூடாது.
தேவ்காட் ஹபுஸ் எனப்படும் ஒரு அற்புதமான மாம்பழம் இப்பகுதியில் விளைகிறது. கோடைக்காலத்தில் வருகை தந்தால் இந்த மாம்பழம் கிடைக்கும். கணபதிக் கடவுளுக்கான பிரசாத பண்டமான மோதகம் எனும் கொழுக்கட்டையையும் இங்கு வித்தியாசமான சுவையில் பயணிகளும் பக்தர்களும் சுவைக்கலாம்.
பயணிகளுக்கான வேறு சில முக்கியமான தகவல்கள்
கணபதிபுலே கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் தீவிர கணபதி பக்தர்களாகவும் விருந்தினர்களை அன்போடு உபசரிக்கும் குணம் கொண்டவர்களாகவும் உள்ளனர். பெரும்பாலும் மராத்தி மொழியை பேசும் இவர்கள் கணபதிபுலேயின் சுற்றுலாத்தல இயல்பு காரணமாக இந்தி ஆங்கிலம் போன்ற மொழியிலும் உரையாடக்கூடியவர்களாக உள்ளனர்.
அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்த கணபதிபுலேயின் பருவநிலை வருடமுழுவதும் விரும்பக்கூடியதாகவே உள்ளது. இருப்பினும் கோடைக்காலத்தில் இது மிக உஷ்ணத்துடன் இருப்பதால் பயணிகள் அக்காலத்தை தவிர்க்கின்றனர்.
கோடையில் விஜயம் செய்யும் பட்சத்தில் நீச்சல் உடைகளுடன் செல்வது நல்லது. மழைக்காலத்தில் இந்த கடற்கரை கிராமத்தை நோக்கி பயணம் செய்வதே ஒரு மறக்க முடியாத அனுபவமாகும்.
அந்த அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை எழில் நம் கண்களை கவர்கின்றன. அபரிமிதமான மழையானது இந்தப்பகுதியை ஒரு கனவுலகம் போல் மாற்றிவிடுகிறது. மழையை விரும்பாதவர்கள குளுமையான குளிர்காலத்தில் இந்த புனித திருத்தலத்துக்கு விஜயம் செய்யலாம்.
முதல் முறை விஜயம் செய்பவராக இருந்தாலும் எளிதில் இந்த கணபதிபுலே ஸ்தலத்தை அடையலாம். விமானம் மூலம் செல்ல விரும்பினால் உங்களுக்கு ரத்னகிரி விமான நிலையம் அருகாமையிலேயே உள்ளது.
ரயிலில் செல்வதென்றாலும் கூட உங்களுக்கு ரத்னகிரியில் ரயில் நிலையமே அருகில் உள்ள ரயில் நிலையமாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக கணபதிபுலே ஸ்தலத்துக்கு காரில் பயணிப்பது ஒரு அற்புத பயண அனுபவமாக இருக்கும்.
போகும் வழியில் உள்ள மலைப்பிரதேச எழிலும் இயற்கைக் காட்சிகளும் அவ்வளவு விசேஷமானவை.இப்போதே திட்டமிடுங்கள் கணபதிபுலே ஸ்தலத்துக்கு விஜயம் செய்வதற்கு. ஒரு மறக்க முடியாத சுற்றுலா அனுபவம் உங்களுக்காக காத்திருக்கிறது.