சந்தடி நிறைந்த நெருக்கடியான மும்பை வாழ்க்கையிலிருந்தோ (அல்லது வேறெந்த மெட்ரோ நகரங்களிலிருந்தோ!) விலகி ஒரு உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த ‘லோனாவலா’ எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். இது மஹாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 625 மீ உயரத்தில் உள்ள இந்த மலை வாசஸ்தலம் அருமையான இயற்கை அழகுடன் விளங்கும் சஹயாத்ரி மலைகளின் மீது அமைந்துள்ளது. 38 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரந்துள்ள இது மும்பையிலிருந்து 89 கி.மீ தூரத்திலும், புனேயிலிருந்து 64 கி.மீ தூரத்திலும் உள்ளது.
லோனாவலா’வின் வரலாற்றுப்பின்னணி
‘குகைகள்’ என்ற பொருளைத்தரக்கூடிய ‘லோனாவலி’ எனும் சம்ஸ்கிருதச் சொல்லிருந்து இந்த லோனாவலா எனும் பெயர் பிறந்துள்ளது. இந்த சொல்லை இன்னும் இப்படி பிரித்து பொருள் சொல்லலாம்.
லென் – மலைப்பாறையில் குடையப்பட்ட ஓய்விடம், ஆவ்லி – ஒரு தொடர் (தொகுப்பு). இப்போதைய லோனாவலா புராதன காலத்தில் யாதவ மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது.
அவர்களுக்குப் பின் முகலாயர்கள் வசம் சென்றது. லோனாவலாவின் இருப்பிட முக்கியத்துவத்தை உணர்ந்து வைத்திருந்த முகலாயர்கள் இதை நெடுநாள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
1871ம் ஆண்டு பாம்பே கவர்னர் சர்’எல்பின்ஸ்டோன் அடர்ந்த காடுகளிடையே ஒரு சில மக்கள் மட்டுமே வசித்து வந்த இந்த லோனாவலாவை ஒரு மலைவாசஸ்தலமாக அடையாளம் கண்டுகொண்டார்.
சந்தடி மிகுந்து நகரச்சூழலிலிருந்து முற்றிலும் விலகி, வருடம் முழுவதுமே மாசற்ற சுற்றுப்புறச்சூழல், தூய்மையான காற்று இனிமையான பருவநிலை மற்றும் குளுமை இவற்றை தன்னுள் கொண்டுள்ள இந்த லோனாவலா ஒரு பிணிதீர்க்கும் ஓய்வுஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. ஆகவே இந்த மலை வாசஸ்தலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்பயணிகளை அதிக அளவில் ஆண்டுதோறும் கவர்ந்திழுக்கிறது.
சஹயாத்ரி மலையின் கிரீடம்
சஹயாத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் இந்த ஸ்தலம் மலையேற்றம், நடைப்பயணம் போன்றவற்றுக்கு உகந்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. அது தவிர வரலாற்றுப்பின்னணி கொண்ட கோட்டைகள், புராதனக்குகைகள் மற்றும் அமைதியான ஏரிகள் போன்றவை இந்த ஸ்தலத்தைச்சுற்றிலும் நிறைந்துள்ளன.
இங்கு பருவநிலை மிகவும் இனிமையானதாக வருடம் முழுவதுமே பயணிகளை வரவேற்கும் இயல்புடன் விளங்குகிறது. ஒரு புறம் பார்த்தால் தக்காண பீடபூமியும் மறுபுறம் பார்த்தால் அழகிய கொங்கண கடற்கரையும சூழ்ந்திருக்க, ஒரு வண்ண ஓவியம் போல் நம் கண் முன் விரியும் இந்த அற்புத ஸ்தலத்தை மழைக்காலத்தில் தரிசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.
ஒரு அமைதியான மாலை நேரத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் லோனாவலா பகுதியிலுள்ள முக்கியமான ஏரிகளும், அணைகளுமான பாவ்னா ஏரி, வலவண் ஏரி, துங்கர்லி அணை மற்றும் துங்கர்லி ஏரி போன்ற இடங்களுக்கு வருகை தரலாம்.
அல்லது மலைஏற்றம் மற்றும் இந்தியாவின் புராதன கட்டிடக்கலை அம்சங்கள் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவராக இருப்பின் துங், திலோனா மற்றும் லோஹகர் (இரும்பு வீடு என்பது இதன் பொருள்) போன்ற அருகிலுள்ள கோட்டைகளைக்கு விஜயம் செய்யலாம்.
கர்ஜாத் பகுதிக்கு அருகில் உள்ள இந்த துங் கோட்டை மாலிக் அகமது’வால் கைப்பற்றப்பட்ட கோட்டையாகும். இது தன் இயற்கையான கட்டமைப்பு மற்றும் வலிமைக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
இங்குள்ள ‘ரைவுட் பார்க்’ உயர்ந்த பசுமையான மரங்களுடன் கூடிய பிரம்மாண்ட பூங்கா தோட்டமாகும். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்கேற்ற பரந்த மைதானம் இங்குள்ளது. சிவாஜி உத்யான் எனும் மற்றொரு இடமும் உல்லாச பொழுதுபோக்குக்கு ஏற்றதாக உள்ளது.
காட்டுச்சுற்றுலா மற்றும் நடைப்பயணங்களை நீங்கள் விரும்புகிறவராக இருப்பின் இங்குள்ள ராஜ்மச்சி சரணாலயம் அதற்கு உகந்ததாக உள்ளது. இங்குள்ள ராஜ்மச்சி பாயிண்ட்(மலைக்காட்சி தளம்) அதற்கருகிலுள்ள சிவாஜி கோட்டை மற்றும் அருகிலுள்ள பசுமை பள்ளத்தாக்குகளை உச்சியிலிருந்து பார்க்கும் அற்புத அனுபவத்தை அளிக்கின்றது.
மேலும் வஃக்ஜாய் தாரி எனும் புகழ் பெற்ற அம்சத்தையும் நீங்கள் இங்கு வருகை தரும்போது அவசியம் பார்க்க வேண்டும். சிக்கி எனும் உள்ளூர் இனிப்புப்பண்டத்தையும் லோனாவலாவில் நீங்கள் அவசியம் சுவைத்துப்பார்க்க வேண்டும்.
அக்டோபர் முதல் மே மாதம் வரையிலான காலம் ஓய்வெடுக்க விரும்புகிறவர்களுக்கு தோதாக குளுமையான சூழலுடன் காணப்படுகிறது. எனினும் பெரும்பாலான பயணிகள் இங்கு மழைக்காலத்தில் விஜயம் செய்ய விரும்புகின்றனர்.
ஆண்டு முழுவதுமே சுற்றுலாப்பயணிகளை வசீகரித்து வரவேற்கும் இனிமையான சூழல் மற்றும் சீதோஷ்ணத்தை லோனாவலா கொண்டுள்ளது. நமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு இங்கு புறப்பட்டு வந்தால் போதும் – பொழுதுபோக்கு, கேளிக்கை, சாகசம் போன்ற இதர அம்சங்களை இந்த லோனாவலா மலைவாசஸ்தலம் பார்த்துக்கொள்ளும்.
நகரத்திலிருந்து விடுதலை!
மும்பை மற்றும் புனே நகரத்திலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரமே உள்ள இந்த மலைவாசஸ்தலம், விமான மார்க்கம், ரயில் மார்க்கம், சாலை மார்க்கம் போன்ற யாவற்றின் மூலமாகவும் எளிதில் அடையும்படி அமைந்துள்ளது.
மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் வழியில் இது உள்ளது. விமானப்பயணத்துக்கு வசதியாக லோனாவலாவுக்கு மிக அருகில் புனே விமான நிலையம் அமைந்துள்ளது.
மிதமான சீதோஷ்ண நிலை, அமைதியான சூழல் மற்றும் மாசற்ற காற்று போன்றவை லோனாவலாவை ஒரு ஒப்பற்ற விடுமுறை பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்க வைத்துள்ளன.
சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்ச்சிகளை ஒட்டி நடக்கலாம், ஒரு மாலை நேரத்தை பசுமையான புல் தரைகளில் கழிக்கலாம் அல்லது மலை ஏற்றத்தில் ஈடுபடலாம். இங்கு பல மக்கள் தங்களுக்கு சொந்தமாகவே விடுமுறை வீடுகளை வாங்கியுள்ளனர். (அதாவது விடுமுறைக்காலத்தை கழிக்கவென்றே மற்றொரு சொந்த வீடு!).
நகர வாழ்க்கைக்கு மாற்றான அமைதி வாழ்க்கைக்கான ஒரு மலைவாசஸ்தலமாக லோனாவலா வேகமாக மாறிவருகின்றது. லோனாவலாவுக்கு நேரில் வந்து பார்க்காத வரை யாருக்குமே இதன் எழிலை புரியவைக்க முடியாது. இப்படி ஒரு இடத்தை பார்க்காமலா இவ்வளவு நாள் இருந்துள்ளோம் என்று அசந்து போவீர்கள்.