இரட்டை மலை வாசஸ்தலங்களான பாஞ்ச்கனி மற்றும் மஹாபலேஷ்வர் இரண்டும் இந்தியாவின் இயற்கை அழகு இப்படியும் இருக்கும் என்ற பெருமைக்கு சான்றுகளாக திகழ்கின்றன. இந்த இரண்டு இடங்களும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ரசிகர்களை ஆண்டு தோறும் ஈர்த்த வண்ணம் உள்ளன. பாஞ்ச்கனி மலைவாசஸ்தலம் ஆங்கிலேயர்களால் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்பட்டதாகும். ஜான் செஸ்ஸன் எனும் ஆங்கிலேய கண்காணிப்பாளரால் இந்த ஸ்தலம் பராமரிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பஞ்ச்கணி என்ற பெயருக்கு ஐந்து மலைகள் என்பது பொருள். இது கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஆங்கிலேயருக்கு பிடித்தமான கோடை வாசஸ்தலமாக விளங்கிய வரலாற்று பின்னணியை கொண்ட பாஞ்ச்கணி இன்றளவும் அதனுடைய குளுமையான பருவ நிலைக்காக அருகிலுள்ள வெப்பமான சமவெளிப்பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. சாதாரணமாகவே இயற்கை வனப்புடன் கவர்ந்திழுக்கும் இந்தப் பகுதி மழைக்காலத்தின் போது கம்பீரமான நீர்வீழ்ச்சிகளுடனும், வளைந்து ஓடும் சின்ன சின்ன ஓடைகளுடனும் மயங்க வைக்கும் எழிலுடனும் திகழ்கிறது.
பாஞ்ச்கணி – எவருக்கும் எல்லோருக்குமான ஒரு ஸ்தலம்
நீங்கள் முதல் முறை சுற்றுலாப்பயணம் மேற்கொள்பராக இருந்தாலும் சரி, அடிக்கடி பையை தூக்கிக்கொண்டு பயணம் கிளம்புகின்ற சாகச விரும்பியாக இருந்தாலும் சரி உங்களுக்காக நிறைய எழில் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இடம்தான் பாஞ்ச்கணி.
தூரத்தில் மலைகளுக்கிடையில் நிகழும் சூரிய அஸ்தமனத்தை ஒரு கனவுக்காட்சி போன்றே மெய்மறந்து ரசிப்பது, ஸ்ட்ராபெர்ரி பழம் பறிப்பது, உல்லாசமான படகு சவாரி செல்வது அல்லது நீங்கள் துணிச்சலான சாகசக்காரராக இருந்தால் பாராகிளைடிங் (பாராசூட்டில் பறத்தல் ) செல்வது இப்படி ஏகப்பட்ட பொழுதுபோக்குகள் பாஞ்ச்கணியில் நிறைந்துள்ளன.
பாராசூட்டில் பறப்பதற்கு இந்தியாவில் மிகச் சிறந்த இடங்களில் ஒன்று இந்த பாஞ்ச்கணி எனலாம். 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இது பிரமிக்க வைக்கும் பசுமை பள்ளத்தாக்குகளையும், புத்துணர்ச்சியூட்டும் காற்றையும், மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை காட்சிகளையும் கொண்டுள்ளது.
பாராசூட்டில் பறந்து இந்த சூழலை ரசிப்பதற்காகவென்றே பல்வேறு இடங்களில் பாராகிளைடிங் தளங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. தனியே பறப்பதற்கு அஞ்சும் புதியவராக நீங்கள் இருப்பின் அனுபவம் மிக்க பைலட்டுடன் நீங்கள் பாராகிளைடிங் செல்லலாம்.
பாஞ்ச்கணி – இயற்கை ரசிகர்களின் சொர்க்கம்
இப்பிரதேசத்தின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க நீங்கள் விரும்பினால் அதற்கென்று குறிப்பாக நிறைய இடங்கள் இங்கு உள்ளன. இங்குள்ள வாய் கிராமத்தில் உள்ள தூம் அணைத்தேக்கத்தில் உள்ள படகுச்சவாரி செய்யலாம். இது அமைதியாக ஓடும் கிருஷ்ணா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள பார்ஸி பாயிண்ட் மற்றும் சிட்னி பாயிண்ட் என்ற இரண்டு மலைக்காட்சி தளங்களிலிருந்து பரந்து விரிந்துள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கை கண்டு ரசிக்கலாம். பாஞ்ச்கணி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த இடத்திலிருந்து பார்த்தால் பிலார் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க முடியும்.
இதை மழைக்காலத்தில் காண்பது சிறந்தது. இங்கு மலை மீது இயற்கையாக அமைந்துள்ள டேபிள்லேண்ட் என்று அழைக்கப்படும் பரந்து விரிந்த சமதளப்பகுதி காணப்படுகிறது. இந்த இடத்தில் சாகச விரும்பிகளுக்கு பிடித்த குதிரை ஏற்றம், பாராசூட் பயணம் போன்றவற்றில் ஈடுபடலாம்.
நீங்கள் ஒரு இயற்கை ரசிகராக இருப்பின், உங்களுக்கு உகந்த இடமாக ஷெர்பாக் என்ற இடம் உள்ளது. இயற்கையான எழிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் ஒரு குழந்தைகள் பூங்கா உள்ளது. இங்கு பலவிதமான பறவைகள், முயல்கள், வான்கோழிகள் மற்றும் அன்னப்பறவைகள் உள்ளன.
இது தவிர, இங்குள்ள புராதனக்குகைகள் மற்றும் கோயில்கள் மற்றும் டெவில்’ஸ் கிச்சன் என்றழைக்கப்படும் பீம் சௌலா, ஹாரிசன் பள்ளத்தாக்கு போன்றவையும் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.
கவர்ந்திழுக்கும் பழமையான மலைவாசஸ்தலம்
பாஞ்ச்கணியில் காலனிய காலத்தை சேர்ந்த பல பழமையான பல தங்குமிடங்கள் உள்ளன. ஆகவே பரபரப்பான சந்தடி வாழ்க்கையிலிருந்து விலகி கொஞ்சம் அமைதியை விரும்பி வரும் சுற்றுலா பயணிகள் இவற்றை வாடகைக்கு எடுத்து தங்கலாம்.
பாஞ்ச்கணியில் பல ஆங்கிலேயர் காலத்திய கட்டிடங்களும், பழமையான நினைவகங்களும், பார்ஸி கட்டிடங்களும் நிரம்பியுள்ளன. இவற்றை சுற்றிப்பார்த்து ரசிப்பதே ஒரு தனி அனுபவம் எனலாம். டி.பி என்றழைக்கப்படும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இடம் மிகவும் பொருத்தமானது. இங்கு கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜன் அவர்கள் சீக்கிரம் குணமடைய உதவும் வகையில் உள்ளது.
பாஞ்ச்கணிக்கு வாகனத்தில் பயணம் செய்வது ஒரு உன்னதமான திகட்ட வைக்கும் அனுபவம் எனலாம். மும்பையிலிருந்து நீங்கள் வந்தால் மும்பை புனே எக்ஸ்பிரஸ்வே வழியாக 285 கி. மீ தூரத்தை கடந்து புனேக்கு முன்னரே பாஞ்ச்கணியை வந்தடையலாம்.
அல்லது மும்பையிலிருந்து கோவா வழியே பயணித்து போலாட்பூரில் இடது புறம் திரும்பி மலைப்பாதையில் ஏறி முதலில் மஹாபலேஷ்வர் வந்து பின் மலைப்பாதையில் இறங்கினால் ஸாதாரா செல்லும் வழியில் பாஞ்ச்கணியை வந்தடையலாம்.
கூட்டமாக பயணம் செய்யும் பட்சத்தில் தங்குவதற்கு பாஞ்ச்கணி மஹாபலேஷ்வர் சாலையில் அஞ்சுமான் – இ –இஸ்லாம் பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ள பயணிகள் இல்லங்களை வாடகைக்கு பதிவு செய்து கொள்வது சிறந்தது.
பாஞ்ச்கணியை விஜயம் செய்ய சிறந்த காலம் மழைக்காலம் முடிந்த பின்னர் வரும் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும். குளிர்காலத்தில் குளிர் 12°C வரை குறைகிறது.
கோடை காலத்திலும் மிக குளுமையாகவே இப்பகுதி காணப்படுகிறது. வருடம் முழுக்கவே விஜயம் செய்ய ஏற்ற இடம் என்பதால் கடுமையான மழைக்காலத்தில் கூட அதாவது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கூட நனைந்த பூமியையும் பசுமை பூசிய இயற்கை சூழலையும் கண்டு களிக்க இங்கு சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.