மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சிறிய அதே சமயம் மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தலம் இந்த மாத்தேரான் ஸ்தலம் ஆகும். தலை சுற்ற வைக்கும் 2,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலாஸ்தலம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மும்பை, புனே போன்ற பரபரப்பான சந்தடி நிறைந்த பெரு நகரங்களுக்கு வெகு அருகில் அமைந்துள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களுக்கான சிற்றுலாத்தலமாக இது புகழ்பெற்றுள்ளது. மாத்தேரான் எனும் சொல்லுக்கு ‘தலையிலுள்ள காடு’ என்பது பொருளாகும்.
1850ம் ஆண்டு இந்த மலைப்பிரதேசம் ‘ஹ்யூ போலின்ட்ஸ் மாலெட்’ எனும் ஆங்கிலேயரால் அடையாளம் காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது. வேட்டைக்கு சென்ற அவர் இந்த ஸ்தலத்தை கண்டறிந்துள்ளார்.
அதன்பின்னர், பாஞ்ச்கனி மலைவாசஸ்தலத்தைப் போன்றே ஆங்கிலேயர்கள் இந்த இடத்தையும் ஒரு அருமையான கோடை மலைவாசஸ்தலமாக உடனே மாற்றி விட்டனர்.
மாத்தேரான் மலைவாசஸ்தலத்தின் சிறப்பம்சங்கள்
எல்லா மலைவாசஸ்தலங்களையும் போன்றே இந்த மாத்தேரான் மலைவாசஸ்தலமும் பல மலைக்காட்சி தளங்களை கொண்டுள்ளது. இந்த மலைக்காட்சி தளங்களிலிருந்து மயக்க வைக்கும் பள்ளத்தாக்கு காட்சிகளை காணமுடிகிறது.
இங்குள்ள 38 ம.காட்சித்தளங்களில் ‘பனோரமா பாயிண்ட்’ எனும் தளம் 360° கோணத்தில் நாலா புறமும் பார்த்து ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற காட்சிகளைக்காணும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
அந்த அளவுக்கு பரவச சிலிர்ப்பை அக்காட்சிகள் அளிக்கின்றன. மேலும், இங்குள்ள ‘ஹார்ட் பாயிண்ட்’ எனும் காட்சி தளத்திலிருந்து மும்பை நகரின் பல வண்ண விளக்குகளின் ஜொலிப்பை இரவில் பார்க்க முடிகிறது.
பிரபால் கோட்டை எனப்படும் புராதன வரலாற்று கோட்டையை ‘லூயிசா பாயிண்ட்’ எனும் இடத்திலிருந்து அருமையாக பார்க்கலாம். இதுவும் ஒரு முக்கியமான மலைக்காட்சி தலமாகும்.
தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் ஒருகாலத்தில் கம்பீரமாக விளங்கிய கோட்டை இது. இன்னபிற மலைக்காட்சி தளங்களாக ‘மங்கீ பாயிண்ட்’, ‘போர்க்குபைன் பாயிண்ட்’ மற்றும் ‘ஒன் ட்ரீ ஹில் பாயிண்ட்’ போன்றவற்றை குறிப்பிடலாம்.
மாத்தேரான் நகரம் ஆங்கிலேய பாணியில் அமைந்த பலவிதமான பழைய சின்னங்களையும் கட்டிடங்களையும் கொண்டுள்ளது. இவை யாவுமே தற்மயம் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள சார்லோட் ஏரிப்பகுதி ஏகாந்தமாக ஓய்வெடுப்பதற்கு உகந்த ஸ்தலமாகும். இங்கு பயணிகள் பறவை வேடிக்கை, கரையோர நடைப்பயணம் போன்றவற்றில் ஈடுபடலாம். குழந்தைகளுடன் பூங்காவில் விளையாடி மகிழவோ அல்லது அன்புக்குரியவருடன் நடக்கவோ ஏற்ற இயற்கைச்சூழல் இங்கு காணப்படுகிறது.
மாத்தேரான் – இயற்கை எழிலின் சொர்க்கபூமி
அடர்ந்து காணப்படும் மாத்தேரான் காட்டுப்பகுதி சில இடங்களில் உள் நுழைய முடியாதபடி உள்ளது. இந்த பிரதேசம் முழுக்க குரங்குகள் சுதந்திரமாக திரிவதை பயணிகள் ஆச்சரியமாக பார்க்கலாம்.
இங்கு சுற்றிப்பார்க்கும்போது கையில் ஏதும் பிளாஸ்டிக் பைகள் அல்லது பொருட்களை கொண்டு செல்லாமலிருப்பது நல்லது. ஏனெனில் குரங்குகள் அவற்றை உங்கள் கைகளிலிருந்து நிச்சயமாக பறித்து செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்த முன்னெச்சரிக்கையை மறக்காமலிருப்பது இனி உங்கள் பொறுப்பு.
மற்றுமொரு சுவாரசியமான அதே சமயம் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் இந்த மாத்தேரான் ஸ்தலத்தில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதாகும்.
உலகிலேயே இது போன்ற விதிமுறை செயல்படுத்தப்படும் வெகுசில இடங்களில் இந்த மாத்தேரான் ஸ்தலமும் ஒன்று. செழிப்பான இயற்கைச்சூழலில் வாகனங்களின் சந்தடி மற்றும் இரைச்சல் அற்ற இந்த ஸ்தலம் உங்களை பழங்கால வாகனங்கள் அற்ற வாழ்க்கை முறைக்கு அழைத்துச்செல்கிறது.
வாகனங்கள் இல்லாததால் சுற்றுப்புறம் மாசு ஏதுமற்று தூய்மையாக காட்சியளிப்பது ஒரு அற்புதம் எனலாம். ஆகவே ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு தினமும் விஜயம் செய்தாலும் இந்த சிறிய மலைஸ்தலத்தின் அமைதியும் சூழலும் பாதிக்கப்படாமல் காட்சியளிக்கிறது.
இங்கு குதிரைச்சவாரி செல்லும் அனுபவத்தையும் பயணிகள் தவறாமல் அனுபவிக்கலாம். பயணிகள் சௌகரியம் கருதி கையால் இழுக்கப்படும் வண்டிகள் இங்கு பயன்படுத்தப்படுவது ஒரு வித்தியாசமான காட்சியாகும். ஆபத்துக்காலம் கருதி ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் இங்கு அனுமதிக்கப்படுகின்றன.
ஷாப்பிங் பிரியர்கள் இங்குள்ள பஜார்களில் கண்டதையும் வாங்கி குவிக்கலாம். பயணிகள் திரும்பிச்செல்லும்போது வாங்கிச்செல்வதற்காக வித்தியாசமான கைவினைப் பொருட்களிலிருந்து பலவிதமான ஞாபகார்த்தப்பொருட்கள் என்று ஏராளம் இங்கே கிடைக்கின்றன.
கோடைக்காலத்தின் சுட்டுப்பொசுக்கும் வெப்பம் இந்த மாத்தேரான் மலைஸ்தலத்தில் நுழையாதவாறு இயற்கையாக தடுக்கப்படுகிறது. வருடம் முழுக்கவே இந்த ஸ்தலத்தில் குளுமையும், இரவில் இன்னும் குளிருடன் கூடிய சூழலும் காணப்படுகிறது.
இருப்பினும் அடிக்கடி இங்கு விஜயம் செய்யும் அனுபவசாலிகள் குளிர்காலமே இங்கு விஜயம் செய்வதற்கான சரியான பருவ காலம் என்று அடித்து சொல்லக்கூடும். ஏனெனில் அக்காலத்தில் இப்பிரதேசத்தில் வழியும் நீர்வீழ்ச்சிகளையும், பளபளக்கு பசுமையைம் கண்டு ரசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
சுருக்கமாக சொன்னால், இப்பகுதியை நோக்கி மலைப்பிரதேசத்தில் காரில் பயணம் செய்யும் அனுபவம் ஒன்றே நம் நினைவில் என்றுமே இனிப்புடன் நிலைத்திருக்கப் போதுமானது.
இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் எளிதில் சென்றடையும்படி மாத்தேரான் ஸ்தலம் அமைந்துள்ளது. விமானம், ரயில், சாலை மார்க்கம் என்று எப்படி வேண்டுமானாலும் இப்பகுதிக்கு வந்தடையலாம்.
நேரம் ரயில் நிலையம் மாத்தேரானுக்கு வெகு அருகில் உள்ளது. நேரல் நிலையத்திலிருந்து மாத்தேரான் மலைஸ்தலம் வரையிலான சிறு சுற்றுலா ரயிலில் பயணிப்பது ஒரு ஆனந்தமான அனுபவமாகும். இது ஊட்டி ரயிலைப்போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் மூலமாக செல்ல விரும்பினால் புனே விமான நிலையம் அருகில் உள்ளது. இங்கு காரில் பயணிப்பது மிகச்சிறந்தது.
இருப்பினும் இங்குள்ள மலைப்பாதைகளில் அனுபவம் உள்ள ஓட்டுனர்கள் மட்டுமே வாகனங்களை பயன்படுத்தவேண்டும் என்பதை மறக்கக்கூடாது. மழைக்காலத்தில் இப்பாதைகளில் வாகனங்களை ஓட்டுவது சிரமமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வெயிலிலிருந்து தப்பிக்கவோ, இயற்கையை ரசிக்கவோ, சந்தடியிலிருந்து விலகி அமைதியை நாடவோ இந்த மாத்தேரான் மலைவாசஸ்தலம் மிக பொருத்தமாக உள்ளது. ஒரு முறை வந்தபின் திரும்ப எப்போது வரலாம் என்று யோசித்தபடியே திரும்புவீர்கள். அதுதான் இந்த மாத்தேரான் மலைவாசஸ்தலத்தின் மகிமை.