மா பம்லேஷ்வரி எனும் புகழ் பெற்ற கோயில் அமைந்திருக்கும் ஸ்தலமான டோங்கார்கர் அதன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழிழ்ற்காட்சிகளுக்காகவும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரபல்யமாக விளங்குகிறது.
இது ராஜ்நாந்த்காவ்ன் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும், துர்க் நகரிலிருந்து 67 கி.மீ தூரத்திலும், ராய்பூரிலிருந்து 107 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. மலைகள் மற்றும் குளங்கள் போன்ற அற்புதமான இயற்கை அம்சங்கள் நிரம்பியுள்ள இந்த டோங்கார்கர் பகுதிக்கு விஜயம் செய்யும் ரசிகர்களுக்கு ஊர் திரும்பவே மனம் வராது என்பதுதான் உண்மை.
இங்குள்ள மா பம்லேஷ்வரி தேவி கோயில் ஒரு மலையுச்சியில் 1600 அடி உயரத்தில் வீற்றிருக்கிறது. இந்த கோயிலைப்பற்றி கூறப்பட்டு வரும் புராணக்கதைகள் ஹிந்து ஆன்மீக யாத்ரீகர்கள் மத்தியில் இந்த கோயிலை பரவலாக அறிய வைத்துள்ளன.
மலையின் உச்சியில் உள்ள கோயில் படி பம்லேஷ்வரி என்றும் அடிவாரத்தில் உள்ள கோயில் சோட்டி பம்லேஷ்வரி கோயில் என்றும் அழைக்கப்படுகின்றன. நவராத்திரி திருநாளின்போது இந்த கோயில் ஸ்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.
சிவன் கோயில் ஒன்றும் ஹனுமான் கோயில் ஒன்றும் கூட இந்த மா பம்லேஷ்வரி கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கின்றன. ஜோதி கலாஷ் எனும் விளக்கேற்றும் சடங்கு நிகழ்ச்சி நவராத்திரியின் போது இக்கோயிலில் நிகழ்த்தப்படுகிறது.
மேலே உள்ள கோயிலுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கயிற்றுக்கார் ஒன்று இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. சத்திஸ்ஹர் மாநிலத்திலுள்ள ஒரே ரோப்கார் அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்பகுதியில் உள்ள சந்திரகிரி மலையில் ஒரு பெரிய ஜைனக்கோயில் ஒன்றும் தற்போது கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஸ்தலத்தில் சந்திரபிரபுஜி எனும் தீர்த்தங்கரரின் புராதன சிலை ஒன்று உள்ளது.
டோங்கார்கர் ஸ்தலத்திலிருந்து 124 கி.மீ தூரத்தில் ராய்பூர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டோங்கார்கர் நகரில் பிரத்யேக ரயில் நிலையமும் உள்ளது.
இருப்பினும் பேருந்துகள் மற்றும் தனியார் டாக்சிகள் என்று சாலைவழி போக்குவரத்து வசதிகளே இங்கு அதிகமாக பயணிகளால் பயன்படுத்தப்படுகின்றன. கல்கத்தா-மும்பை தேசிய நெடுஞ்சாலையான NH6 டோங்கார்கர் வழியாக செல்கிறது.
இந்த சாலை பசுமையான வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளதால் இதில் பயணிக்கும் அனுபவமும் கூட பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். வருடத்தின் எல்லா நாட்களிலும் இந்த டோங்கார்கர் கோயில் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து மகிழலாம்.