கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் உள்ள இந்த ரிஷ்யப் மலை நகரத்தில் எல்லாமே வித்தியாசமான சூழலுடன் காட்சியளிக்கின்றன என்பதில் வியப்பொன்றுமில்லை. நகர வாழ்க்கை முறையையே பார்த்து அலுத்துப்போன மனங்களுக்கு இப்பிரதேசத்தின் பரபரப்பற்ற வாழ்க்கை முறை ஒரு ஒத்தடமாக இருக்கக்கூடும். மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் லாவா எனும் இடத்திலிருந்து 4 கி.மீ தூரம் மலையேற்றம் செய்து இந்த ரிஷ்யப் மலைவாசஸ்தலத்தை அடைய வேண்டியுள்ளது. இந்த மலையேற்ற பயணம் ஒன்றே உங்கள் சுற்றுலா அனுபவத்தை பூர்த்தி செய்ய போதுமானது என்றால் அது மிகையில்லை.
சுற்றுலா அம்சங்கள்
ரிஷ்யப் எனும் பெயருக்கு ‘மலைச்சிகரமும் மரமும்’ என்பது பொருள். நேவ்ரா பள்ளத்தாக்கு பகுதியில் அழகான மலைகளுக்கிடையே இந்த பிரதேசம் அமைந்திருக்கிறது. இங்கிருந்து கஞ்சென்ஜுங்கா சிகரத்தை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
இது தவிர டாலுங், பாண்டிங், சிம்வோ மற்றும் கார்க் போன்ற சிகரங்களையும் பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுக்கலாம். ரிஷ்யப் ஸ்தலத்திலிருந்து நடக்கும் தூரத்தில் பிரசித்தமான லாவா மடாலயம் அமைந்துள்ளது.
இயற்கை எழில்
அடர்ந்த பசுமையான பைன் மரக்காடுகளை பார்த்து ரசிக்க விரும்பினால் ரிஷ்யப் ஸ்தலத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள பெடோங் எனும் இடத்திற்கு விஜயம் செய்யலாம்.
இது இந்தியா மற்றும் திபெத்திய பகுதியை இணைக்கும் இடமாகும். இவை தவிர, ஷெர்ப்பா தாரா அல்லது டிஃபந்தரா என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து பனிமூடிய இமயமலைச்சிகரங்களை காண முடியும்.
திபெத் மற்றும் நேபாளம் ஆகிய இரண்டு நாட்டுப்பகுதிகளையும் ஒரே இடத்திலிருந்து பார்க்க உதவும் ஸ்தலமாக இந்த ரிஷ்யப் பிரசித்தி பெற்றுள்ளது.
இயற்கை நடைப்பயணம்
ரிஷ்யப் மலைவாசஸ்தலத்தில் நேச்சர் வாக் எனப்படும் இயற்கை நடைப்பயணம் மேற்கொள்வதற்கான சுற்றுலா சேவைகள் வழிகாட்டியின் துணையுடன் வழங்கப்படுகின்றன.
மலைப்பகுதியில் முக்கியமான பொருட்கள் ஏதும் கிடைக்காது என்பதால் பயணிகள் தங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் இதர பொருட்களுடன் பயணம் மேற்கொள்வது அவசியம்.
சுற்றுலாவுக்கேற்ற பருவம்
குளிர்காலம் முடிந்தபின் துவங்கும் பருவத்தில் ரிஷ்யப் மலைவாசஸ்தலத்துக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.