கோவாவில் உள்ள சக்வேலிம் நகரம் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கக் கூடிய இடங்களில் ஒன்று. இந்த சக்வேலிம் நகரத்திற்கு மாற்று வழியில் வருவீர்களானால் நீங்கள் சிறப்பு வாய்ந்த அர்வேலம் குகைகளை அடைவீர்கள்.
இந்த குகைகளில் பாண்டவர்கள் தங்களின் 12 வருட வனவாசத்தின் போது தங்கி இருந்ததாக புராணச் செய்திகள் கூறுகின்றன. இதனால்தான் இந்த குகைகள் பாண்டவ குகைகள் என்ற மற்றொரு பெயரை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. அர்வேலம் குகைகள் 6-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை என்றாலும், இதன் காரணகர்த்தாக்கள் யாரென தெரியவில்லை. மேலும் சிலர் இது புத்த மதத்தை சேர்ந்தது என்று கூறினாலும், இதன் சுவர்களில் சில சிவலிங்கங்கள் காணப்படுவதால் இந்த குகை இன்ன மதத்தை சார்ந்தது என்று அறுதியிட்டு கூற முடியவில்லை.
அதோடு இந்தக் குகைகளில் சில 7-நூற்றாண்டை சேர்ந்த சம்ஸ்கிருத கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் சந்தேகங்களை எழுப்பும் விதமாகவே உள்ளன. எனினும் இந்த குகைகள் செம்பூராங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருப்பதும், இதன் கட்டிடக் கலை பாணியையும் வைத்து பார்க்கையில் இது புத்த மதத்தை சேர்ந்ததாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
அர்வேலம் குகைகளின் புராணச் சிறப்பு காரணமாக இங்கு வரும் ஹிந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. ஆனாலும் குகையின் செவ்வண்ண அழகும், இயற்கையும் மற்ற சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த குகைகளை மழைக் காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.
அர்வேலம் குகைகளை அடைவதற்கு நீங்கள் ஒரு நெடுந்தூரப் பயணத்துக்கு தயாராக இருக்க வேண்டும். இந்த குகைகள் சக்வேலிம் நகருக்கு அருகாமையில் இருப்பதோடு, வாஸ்கோ, மார்கோ, பனாஜி போன்ற நகரங்களுக்கு கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த குகைகளுக்கு உங்கள் சொந்த வாகனத்தில் செல்லும் அனுபவம் அலாதியானது.