குமுளியிலுள்ள இந்த ‘கடத்தநாடன் களரி மையம்’ களரிப்பயட்டு சண்டைக்கலை ஆர்வலர்கள் மற்றும் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மையமாகும். பல நூற்றாண்டுகள் பழமையை உடைய கேரளாவின் பாரம்பரிய கலையான இந்த களரிப்பயட்டு மிக பிரசித்தி பெற்ற சண்டைக்கலையாகும்.
வேகமான உடல் அசைவுகள் மற்றும் பிரமிக்க வைக்கும் வீச்சுகளை கொண்ட இந்த தற்பாதுகாப்பு கலை கேரள வரலாற்றின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் பின்னி பிணைந்துள்ளது.
இந்த கடத்தநாடன் களரி மையத்தில் நிகழ்த்தப்படும் களரிபயட்டு நிகழ்ச்சிகளை இங்கு அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்திலிருந்து பயணிகள் பார்த்து ரசிக்கலாம். உடல் திறன் பயிற்சி மற்று தற்பாதுகாப்பு நுணுக்கங்களை உள்ளடக்கிய இந்த சண்டைக்கலை பற்றிய தகவல்களையும் இந்த மையத்தில் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.
தினமும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த மையத்தில் களரி பயிற்சிகள் பார்வையாளர்களுக்காக நிகழ்த்தப்படுகிறது. நம்ப முடியாத உடல் அசைவுகள், கை வீச்சு, எதிர் வீச்சு, ஆயுத வீச்சு, எகிறிப்பறத்தல், சிலம்பவீச்சு, வாள்வீச்சு, மல்யுத்த முட்டல்கள் போன்ற எல்லா அம்சங்களையும் கதம்பமாக கொண்டுள்ள இந்த சண்டைக்கலை பயிற்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கின்றன.
கடத்தநாடன் களரி மையத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு களரி சண்டைக்கலை பயிற்சியும் தரப்படுகிறது. அடிப்படையாக முதலில் உடல் அசைவுகள் மற்றும் கால் அசைவுகள் போன்ற உடல் சமநிலைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் இடைநிலை கடினப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வாள், ஈட்டி, சுருள் கத்தி போன்ற ஆயுதங்களை உள்ளடக்கிய பயிற்சிகள் முதுநிலை பிரிவை எட்டியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.