முரிக்கடி எனும் இந்த அற்புத இயற்கை எழில் ஸ்தலமானது தேக்கடி பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு அலையலையாக பரந்து விரிந்திருக்கும் மலைத்தோட்டங்கள் வண்ண ஓவியம் போன்று பசுமையாக காட்சியளிக்கின்றன. பெரியார் காட்டுயிர் சரணாலயத்திற்கு அருகிலேயே உள்ளதால் இந்த இரண்டு இடங்களையும் ஒரே பயணத்தில் கூட பார்த்து ரசிக்கலாம்.
காப்பி, தேயிலை, மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற வாசனைப்பயிர்கள் இந்த முரிக்கடி மலைத்தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்களின் வாசனை பிரதேசமெங்கும் வியாபித்திருப்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் இயற்கைச்சூழலாக இந்த முரிக்கடி மலைப்பகுதி பிரசித்தி பெற்றுள்ளது.
மலைத்தோட்டப்பகுதிகளை சுற்றுலாப்பயணிகளுக்கு சுற்றிக்காட்டுவதற்காக இங்கு உள்ளூர் சுற்றுலா சேவைகளும் நடத்தப்படுகின்றன. குடும்பத்துடன் சிற்றுலா செல்லவும் மலையேற்றத்துக்கும் இந்த முரிக்கடி பிரதேசம் மிகவும் ஏற்றதாக காட்சியளிக்கிறது.
வசியப்படுத்தும் மிளகுக்கொடிகள், கண்ணுக்கு குளுமையான மலைத்தோட்ட சரிவுகள், நறுமணம் கமழும் தென்றல், பனி படர்ந்த மலைகள், பச்சை விரிப்பை விரித்தாற்போன்ற பள்ளத்தாக்குகள் போன்ற எழில் அம்சங்கள் நிரம்பியுள்ள இந்த முரிக்கடி ஸ்தலம் விடுமுறை சுற்றுலாவுக்கு பிரசித்தமான இடமாக பெயர் பெற்றுள்ளது.
இயற்கை ரசிகர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் இங்கே வருகை தந்தால் உடனே அவர்கள் ஊர் திரும்புவது சந்தேகமே. அந்த அளவுக்கு வசியப்படுத்தும் எழிற்காட்சிகளுடன் முரிக்கடி அமைதியாக வீற்றுள்ளது.