காட்டு ஒற்றையடிப்பாதைகள் நிரம்பிய மலைப்பாங்கான பிரதேசத்தை கொண்டிருப்பதால் தேக்கடியில் மலையேற்றம் ஒரு முக்கியமான சாகச பொழுதுபோக்கு அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
மலையேறிகள் மற்றும் சாகச பயணிகளுக்கேற்ற பல மலையேற்றப் பாதைகள் குறிப்பாக பெரியார் காட்டுயிர் சரணாலயத்தில் நிரம்பியுள்ளன. புல்லுமேடு, குமுளி, குரிசுமலா, ஒட்டகதலமேடு மற்றும் கிராம்பி போன்ற இடங்களில் உள்ள மலையேற்றப்பாதைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
மலையேறிகள் இந்த பாதைகளின் வழியே மலையேறுவதற்கு வனத்துறையினரின் அனுமதியை முதலில் பெறுவது அவசியம். மேலும், கேரளா வனத்துறையினரே தினமும் இப்பகுதியில் மலையேற்றச் சுற்றுலாப்பயணங்களை ஏற்பாடு செய்கின்றனர்.
இது தவிர மாவட்ட சுற்றுலா தகவல் அலுவலகத்தின் மூலம் ‘பிளான்டேஷன் டூர்ஸ்’ எனப்படும் பயிர்த்தோட்ட காட்சி சிற்றுலாக்களும் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த சுற்றுலாச்சேவைகள் மூலம் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்கள், ஏலக்காய் தோட்டங்கள், தேயிலை பதனிடும் தொழிற்சாலைகள், மிளகுத்தோட்டங்கள், வாசனைப்பயிர் தோட்டங்கள் மற்றும் பழங்குடியினர் வசிப்பிடங்கள் போன்ற எல்லா இடங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்து ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வனத்துறை மூலம் யானைச்சவாரி காட்டுச்சுற்றுலாவும் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. மற்றொரு விசேஷமான அம்சமாக புலிகள் சரணாலயத்தில் இரவு நேர காட்டுச்சுற்றுலா என்ற சாகச சுற்றுலா சேவைகளும் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் தனியார் துறையினரால் வழங்கப்படுகிறது.
சிரமம் இல்லாத 3 மணி நேர சவாரிக்கு 500 ரூ வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த அனுபவம் வாழ்வில் மிக வித்தியாசமான மறக்க முடியாத ஒன்றாக அமையும்.
மேலும் பசுமை நடைபயணம், இயற்கை நடைபயணம், எல்லை தாண்டும் பயணம் மற்றும் கடும் மலையேற்றம் போன்ற பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இப்பகுதியில் வனத்துறை மற்றும் இதர துறைகளின் உதவி மற்றும் பங்கேற்போடு பயணிகளுக்கு அளிக்கப்பட காத்திருக்கின்றன.