தேக்கடி பகுதியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள சிறு நகரமான இந்த வண்டிப்பெரியார் இடுக்கி மாவட்டத்தில் அடங்கியுள்ளது. பசுமை நிரம்பிய இந்த பிரதேசத்தின் வழியாக பெரியார் ஆறு பாய்வதால் சமூக கலாச்சாரமும் விவசாயமும் இப்பகுதியில் தழைத்தோங்கியுள்ளது.
பரந்து காணப்படும் பசுமையான தூய்மையான பயிர்த்தோட்டங்களுக்கு இப்பகுதி புகழ் பெற்றுள்ளது. தரமான தேயிலை, மிளகு மற்றும் காபி போன்ற பணப்பயிர்கள் இங்குள்ள தோட்டப்பண்ணைகளில் விளைவிக்கப்படுகின்றன.
வாசனைப் பொருட்களுக்கான வியாபாரக் கேந்திரமாகவும் இந்த வண்டிப்பெரியார் பிரசித்தமாக அறியப்படுகிறது. மேலும், இங்குள்ள அரசு வேளாண்மைப் பண்ணை மற்றும் மலர்த்தோட்டம் ஆகிய இரண்டு இடங்களிலுமுள்ள மலர்த்தாவரங்களும் பசுமை வளமும் ரசிக்க படவேண்டியவையாகும்.
பிரபலமான நிறுவனங்களான ‘ஏ.வி.டி’ மற்றும் ‘ஹாரிசன்ஸ் மலையாளம்’ ஆகியவற்றுக்கு சொந்தமான தேயிலைத்தோட்டங்களும் உற்பத்தி நிலையங்களும் இப்பகுதியில் ஏராளமாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன் அனுமதி பெற்று இந்த உற்பத்தி நிலையங்களுக்கு விஜயம் செய்து தேயிலை பதனிடல், தரப்பிரிப்பு மற்றும் உருவாக்கம் போன்ற நடைமுறைகளை தெரிந்துகொள்ளலாம்.
வண்டிப்பெரியார் பகுதியில் பல விடுமுறை ரிசார்ட் விடுதிகளும் மலிவு கட்டணங்களை கொண்ட தங்கும் விடுதிகளும் காணப்படுவதால் குடும்பச்சுற்றுலா மற்றும் தேனிலவுப்பயணம் மேற்கொள்வோர்க்கு இந்த சிறு நகரம் உகந்ததாகும்.