இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும்.
இக்கோயில் புதன் பகவானின் உறைவிடமாகும். இங்கு சிவபெருமான், “ஸ்வேதாரண்யேஸ்வரர்” என்ற திருப்பெயருடன், மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். பார்வதி தேவி, “பிரம்மவித்யாநாயகி” என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.
இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர்.
“ஸ்வேதாரண்யேஸ்வரர்” என்னும் பெயர், “ஸ்வேதாரண்யம்” மற்றும் “ஈஸ்வரர்” என்ற இரு வார்த்தைகளால் ஆனது. சமஸ்கிருதத்தில், “ஆரண்யம்” என்றால் “காடு” என்றும் “ஸ்வேதம்” என்றால் “வெள்ளை” என்றும் அர்த்தமாகிறது.
ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், இங்கு சிவபெருமானின் திருவுருவப் படம், தத்புருஷம், வாமதேவம், ஈசானம், சத்யோஜதம் மற்றும் அகோரம் என்ற ஐந்து முகங்கள் உடையதாக வரையப்பட்டுள்ளது.
நுழைவுவாயிலில் நந்தியின் திருவுருவம் அமைந்துள்ளது, இக்கோயிலின் மற்றுமொரு தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாகும். இச்சிலை, உடல் பாகத்தில் ஒன்பது தழும்புகளுடன் தாயார் சந்நிதியின் நுழைவுவாயிலில் நிறுவப்பட்டுள்ளது.
நந்தி சிலையின் முகம் சிவபெருமானின் சந்நிதியை நோக்கியும், அதன் காதுகள் தாயார் சந்நிதியை நோக்கியும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, சிவபெருமான்-பார்வதி தேவி தம்பதியரின் ஆணைகளை, நந்தி சிரமேற்கொண்டு நிறைவேற்றுவார், என்பதை எடுத்து கூறும் விதமாக உள்ளது.
மேலும், இக்கோயிலில், அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும் உள்ளன. இம்மூன்று தீர்த்தங்களும், சிவதாண்டவத்தின் போது சிவனின் கண்ணில் இருந்து விழுந்த மூன்று துளிகளில் இருந்து உருவானதாக நம்பப்படுகிறது.
இங்கு உள்ள சுவரோவியங்கள் சோழ சாம்ராஜ்யம் மற்றும் விஜயநகர மன்னர்களின் முக்கிய வரலாற்று தகவல்களை அறிந்துகொள்ளும் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.
சிவபெருமானுக்குரிய கோயிலாக இருப்பினும், மக்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள மோசமான கிரக நிலைகளினால் பாதிக்கப்படாமல் இருக்கவும், தங்கள் வாழ்க்கையில் நற்பயன்களை அடையவும், புதன் பகவானின் அருளை வேண்டி, இக்கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்தபடி உள்ளனர்.



Click it and Unblock the Notifications