மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இந்த துரா சிகரம் அமைந்துள்ளது. இந்த அற்புதமான மலைச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 872 மீ உயரத்தில் அமைந்துள்ளது. நோக்ரெக் தேசியப்பூங்காவின் பராமரிப்புப்பொறுப்பில் இந்த சிகரம் பாதுகாக்கப்படுகிறது.
உள்ளூர் கதைகளின்படி இந்த சிகரம் துரா எனும் கடவுள் வசிக்கும் இடமாக நம்பப்பட்டு வருகிறது. ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவே டுரா என்று மாற்றி அழைக்கப்பட்டது.
துரா சிகரத்திலிருந்து பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குகளையும் பங்களாதேஷ் சமவெளிப்பகுதிகளையும் நன்கு பார்த்து ரசிக்க முடியும். இந்த சிகரத்தின் உச்சியில் ஒரு பயணியர் மாளிகை, வானோக்கு கூடம் மற்றும் சிஞ்சோனா பயிர்த்தோட்டம் ஆகியவை அமைந்துள்ளன.
சிகரத்தின் உச்சிக்கு செல்வதற்கு ஒரு நடைபாதை வழியும் உள்ளது. இது மலை ஏறிகள் மற்றும் இயற்கை ரசிகர்களிடையே வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது. ஷில்லாங் நகரத்திலிருந்து சுற்றுலாப்பேருந்து மூலம் இந்த துரா நகரத்தை வந்தடையலாம்.