பெயரை சொன்னாலே சிலிர்க்க வைக்கும் இயல்பு கொண்ட ‘நாடுகாணி’ எனப்படும் இந்த மிகப்பிரசித்தமான இயற்கை எழில் பிரதேசம் ஒரு மலையின் உச்சியில் இடம்பெற்றுள்ளது.
இது மூணார் நகரப்பகுதியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த எழிற்பிரதேசம் அற்புதமான மலைத் தோற்றங்களையும், சிற்றோடைகளையும், பரந்த புல்வெளிப்பகுதிகளையும், தூய்மையான வானவெளியையும், அலையோடும் நெல்வயல்களையும் கொண்டு நெஞ்சையள்ளுகிறது.
அதுமட்டுமல்லாமல், நாடுகாணி பிரதேசம் பறவை ஆர்வலர்கள் மற்றும் காட்டுயிர் ரசிகர்களுக்கு ஏற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு இருவாட்சி, காட்டு முயல், சாம்பார் மான் மற்றும் காட்டு மைனா போன்ற அற்புதமான உயிரினங்களை பார்த்து ரசிக்கலாம்.
ஒருபுறம் மலைகளாலும் மறுபுறம் மூவாட்டுபுழா ஆற்றினாலும் சூழப்பட்டுள்ள இந்த நாடுகாணி குடும்பச் சுற்றுலாவுக்கும் தேனிலவுப் பயணத்துக்கும் மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.
நாடுகாணியின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் இங்கு அமைக்கப்பட்டுள்ள மூலமட்டம் தரையடி சுரங்கத்தள மின்னுற்பத்தி நிலையமாகும். அடர்ந்த தாவரப்பசுமையுடன் காட்சியளிக்கும் மலைகள் மற்றும் அடர்த்தியான வனப்பகுதி போன்றவற்றை கொண்டுள்ளதால் இங்கு மலையேற்றத்திலும் ஈடுபடலாம்.
இடுக்கி காட்டுயிர் சரணாலயத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் நாடுகாணி பிரதேசமானது வளமான தாவரச்செழிப்பு மற்றும் காட்டுயிர் அம்சங்கள் போன்றவற்றை பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications