பயணிகள் பிஜாப்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் பரா கமன் என்றழைக்கப்படும் இந்த சமாதி ஸ்தலமும் ஒன்று. இரண்டாம் அலி அடில் ஷாவின் சமாதி ஸ்தலமாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பாதியிலேயே நின்று போயிருக்கும் ஒரு வரலாற்று கட்டிடக்கலை அமைப்பாக காணப்படுகிறது.அடில் ஷாஹி ராஜ வம்சத்தின் மிகச்சிறந்த மன்னரான அலி அடில் ஷா ஒரு நூதனமான கலையம்சமுள்ள ஒரு சமாதி ஸ்தல வடிவமைப்பை தனக்காக உருவாக்க விரும்பி இதனை ஸ்தாபித்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
கூரை அமைப்பு ஏதுமற்று ஒரு பிரமாண்ட பீட அடித்தளத்தின் மீது அமைந்துள்ள இந்த வளாகத்தின் மையத்தில் அமைந்திருக்கும் கல்லறைகளைச்சுற்றி குறுக்காக 12 வளைவுகளும் நெடுக்காக 12 வளைவுகளும் வருமாறு இந்த நினைவிடம் வித்தியாசமான வடிவமைக்கப்பட்டு ஆனால் பூர்த்தியடையாமல் காணப்படுவதை பயணிகள் பார்க்க முடியும்.இந்த சமாதி ஸ்தல வடிவமைப்பிலுள்ள கல் வளைவுகளின் நிழல் கோல் கும்பாஸ் மண்டபத்தில் விழக்கூடும் என்ற அனுமானத்தில் இந்த சமாதிஸ்தல வடிவமைப்பு நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
குறுக்காக இருக்க வேண்டிய வளைவுகளில் தற்சமயம் இரண்டு மட்டுமே காணப்படுகின்றன. மௌனமாய் நிற்கும் இந்த பாறை வளைவுகள் இனம்புரியாத உணர்வுகளை நம் மனதில் தோற்றுவிக்கின்றன. இந்திய தொல்லியல் துறையில் கட்டுப்பாட்டில் இந்த வரலாற்றுச்சின்னம் உள்ளது.