கிஷ்கிந்தா தீம் பார்க் சென்னையில் உள்ள ஒரு முக்கியமான தனியார் பொழுதுபோக்கு மையமாகும். இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ரசிக்கக்கூடிய ஏராளமான சவாரி அம்சங்கள் உள்ளன. இது தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிராமத்தை ஒட்டிய ஏகாந்தமான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
வார இறுதியில் பொழுதுபோக்குவதற்காக ஏராளமான சென்னைவாசிகள் இந்த கிஷ்கிந்தாவுக்கு வருகை தருகின்றனர். பூங்காவைபோன்ற அழகிய சூழல், இயற்கை அழகு, பொழுதுபோக்கு சவாரி அம்சங்கள் போன்றவை நிறைந்துள்ளதால் இந்த பொழுதுபோக்கு பூங்கா சென்னையில் பிரசித்தமான பொழுதுபோக்கு ஸ்தலமாக அறியப்படுகிறது.
எல்லாத்தரப்பினரும் விரும்பக்கூடிய அம்சங்கள் இந்த பூங்காவில் நிரம்பியுள்ளன. பம்பர் கார் சவாரி, பம்பி காட்டெர்பில்லர் சவாரி, விளையாட்டு ரயில் மற்றும் அலை நீச்சல் குளம் போன்றவை இங்குள்ள சில அம்சங்களாகும்.
ரோலர் கோஸ்டர், டிவிஸ்டர் போன்ற அதிசாகச சவாரி அமைப்புகளும் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்படும் ஒரு ஃபுட் கோர்ட் வளாகமும் இதன் உள்ளேயே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.