எலியட்ஸ் பீச் என்று அழைக்கப்படும் இந்த பெசன்ட் நகர் கடற்கரையானது தென்சென்னை பகுதியை சேர்ந்த மக்கள் பொழுதுபோக்க பயன்படும் ஒரு முக்கியமான இடமாகும். டாக்டர் அன்னி பெசன்ட் இப்பகுதியில் வசித்த காரணத்தால் பெசண்ட் நகர் என்ற பெயர் இப்பகுதிக்கு ஏற்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையின் நீட்சியானது அடையாறு ஆறு கழிமுகம் வரை முடிந்த பின்னர் ஆற்றுக்கு இக்கரையிலிருந்து பெசன்ட் நகர் பீச் துவங்குகிறது. இந்த கடற்கரைக்கு அருகிலேயே வேளாங்கன்னி மாதா கோயில் மற்றும் அஷ்டலட்சுமி கோயில் ஆகிய முக்கிய ஆன்மீகத்தலங்களும் அமைந்திருக்கின்றன.
பெசண்ட் நகர் கடற்கரையில் கார்ல் ஷ்மிட் எனும் டச்சு மாலுமிக்காக 1930ம் ஆண்டில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை பார்க்கலாம். நீச்சல் தெரியாத ஒருவரை காப்பாற்ற முயன்று இவர் உயிர் துறந்துள்ளார்.
இந்த சின்னம் பல தமிழ்ப்படக்காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. தற்போது சற்றே சேதமடைந்து காணப்படும் இதனை பாதுகாக்க பல ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
பெசண்ட் நகர் கடற்கரை உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் பொழுதுபோக்குத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. பொதுவாக இளைஞர்கள் மாலை நேரத்தில் இங்கு கூட்டமாக கூடி நண்பர்களுடன் உல்லாசமாக பொழுது போக்குகின்றனர்.
வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சென்னைவாசிகள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். கடற்கரைக்கு அருகிலேயே நல்ல உணவகங்களும் அமைந்துள்ளன.
எலியட்ஸ் பீச் கடற்கரைச்சாலையின் வடமுனையில் ஒப்பற்ற நடனக்கலைஞரான சந்திரலேகா வாழ்ந்து மறைந்த இல்லம் உள்ளது. இது தற்போது ‘ஸ்பேசஸ்’ என்ற பெயரில் ஒரு கலைக்கூடமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு பல பரீட்சார்த்த நவீன நாடக அரங்கேற்றங்கள், கலை முயற்சிகள் நிகழ்த்தப்படுவதோடு ஒரு களரிப்பயட் பயிற்சிப்பள்ளியும் இயங்கி வருகிறது.