தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த பேராலயம் மடோனா ஆப் வேளாங்கன்னிக்கு அர்ப்பனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பேராலயத்தில் குடிகொண்டிருக்கும் அன்னை மரியா, ஆரோக்கிய அன்னை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
புதுமைகள் அரங்கேறும் வேளாங்கன்னி
வேளாங்கன்னி திருத்தலம் ஏராளமான புதுமைகள் அரங்கேறும் புண்ணிய தலமாக நம்பப்படுகிறது. அதாவது கிபி 1560ல் அன்னை கன்னி மரியா இந்த வேளாங்கன்னியில் காட்சி கொடுத்ததாகவும், அதிலிருந்து தினமும் இங்கு ஏராளமான புதுமைகள் நடந்து வருவதாகவும் மக்கள் நம்பி வருகின்றனர்.
ஆரோக்கிய அன்னையின் காட்சிகள்
வேளாங்கன்னியில் அன்னை மரியா தனது குழந்தை இயேசுவோடு, ஒரு பால்காரர் முன் தோன்றி, தனது மகனின் பசியைப் போக்க அவரிடம் பால் கேட்டதாக, ஒரு பரவலான ஒரு நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. இந்த நிகழ்ச்சியை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தனியாக ஒரு சிறிய ஆலயமும் இங்கு உள்ளது.
பொதுவாக வேளாங்கன்னி புதுமைகளின் பூமி என்று நம்பப்படுகிறது. அவற்றில் ஒன்றாக கீழ்வரும் நிகழ்ச்சியைக் குறிப்படலாம். கிபி 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த சில வியாரிகள் தங்கள் பாய்மர கப்பல் மூலம் இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் ஒரு பெரிய புயலால் தாக்கப்பட்டனர். தங்களின் உயிர் போகப்போகும் நிலையில் தங்களைக் காக்க வேண்டும் என்று அன்னை மரியாவை வேண்டினர். மேலும் தாங்கள் உயிருடன் கரையிறங்கும் பகுதியில் அன்னை மரியாவுக்கு ஒரு ஆலயம் கட்டுவதாகவும் வாக்குறுதி கொடுத்தனர்.
அவர்களின் வேண்டுதல் கேட்கப்பட்டு, அவர்களின் உயிர் மற்றும் உடைமைகள் காப்பாற்றப்பட்டு, அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8 அன்று அவர்கள் வேளாங்கன்னி கடற்கரையில் பத்திரமாக கரையிறங்கினர்.
பின் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி அன்னை மரியாவுக்கு வேளாங்கன்னியில் ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டினர். தற்போது அந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு அழகாக காட்சி அளிக்கிறது.
மேற்சொன்ன புதுமையைத் தவிர்த்து வேறு இரண்டு புதுமைகளையும் பக்தர்கள் பரவலாகப் பேசி வருகின்றனர். அதாவது ஒரு பால்காரச் சிறுவன் முன்பு அன்னை மரியா தோன்றி தனக்கு ஒரு செம்பு பால் தருமாறு கேட்டார்.
ஆனால் அந்த சிறுவன் தரவில்லை. மாறாக தனது வாடிக்கையாளருக்குக் கொடுத்தான். உடனே அந்த செம்பிலிருந்து பால் பொங்கி தொடர்ந்து நிரம்பி வழிந்து கொண்டிருந்து.
அதைப் பார்த்த அந்த சிறுவனும் மற்றும் வாடிக்கையாளரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்து வாழ்வில் மாற்றம் கண்டு அன்னையின் பக்தர்கள் ஆனார்கள். அதுபோல் இன்னொரு முறை அன்னை மரியா மோர் விற்கும் ஒரு நடக்க முடியாத சிறுவன் முன் தோன்றி மோர் கேட்டார்.
அந்த சிறுவனும் அன்னை மரியாவுக்கு கொடுத்தான். உடனே அவன் கால் வலுபெற்று நடக்க ஆரம்பித்தான். இந்த புதுமையையும் பக்தர்கள் பெரிதாக பேசி வருகின்றனர்.
சுனாமியை வீழ்த்தி நம்பிக்கையை விதைக்கும் வேளாங்கன்னி
இவ்வளவு பெருமை வாய்ந்த வேளாங்கன்னிக்கு கருப்பு நாளாக அமைந்தது 2004, டிசம்பர் 26 ஆகும். அதாவது அன்றுதான் உலகையே உலுக்கிய சுனாமி, வேளாங்கன்னியையும் புரட்டிப் போட்டது.
வேளாங்கன்னியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிவிட்டு வீடு திரும்ப இருந்த பக்தர்கள் பலரின் உயிர்களையும் மற்றும் வேளாங்கன்னி மக்களையும் இந்த சுனாமி காவு வாங்கியது.
அது மிகவும் சோகமான நிகழ்வு ஆகும். ஆனால் விரைவில் பலரது முயற்சி முற்றும் உழைப்பினால் மீட்பு பணிகள் மற்றும் மனிதாபிமான பணிகள் முடுக்கிவிடப்பட்டு, சுனாமி பாதிப்பிலிருந்து மிக வேகமாக வேளாங்கன்னி மீண்டு வந்தது. தற்போது சுனாமியின் சுவடுகளை பார்க்க முடியாத அளவிற்கு, புதிய மெருகுடன் வேளாங்கன்னி காட்சி தருகிறது.
வேளாங்கன்னியில் பார்க்க வேண்டிய இடங்கள்
வேளாங்கன்னியில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. குறிப்பாக வேளாங்கன்னி பேராலயம், பக்தர்களின் காணிக்கை அருங்காட்சியகம், பேராலய கடை மற்றும் வேளாங்கன்னி கடற்கரை போன்றவை காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவருபவைகளாக உள்ளன. அன்னையின் நீரூற்று, புனித ஸ்நானம் மற்றும் அன்னையின் நீரூற்று ஆலயம் ஆகியவை சுற்றலா பயணிகளுக்கு பரவசத்தை ஏற்படுத்தும்.
வேளாங்கன்னியில் நவீன வசதிகள்
தற்போது வேளாங்கன்னியில் ஏராளமான நவீன வசதிகள் உள்ளன. குறிப்பாக ஏடிஎம் மையங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் தொடர்வண்டி நிலையம் ஆகியவை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை இருகரம் விரித்து அழைக்கின்றன.
பேராலய கடையில் ஏராளமான கைவினைப் பொருள்கள் மற்றும் கிறித்தவ சமயம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் ஒலி நாடாக்கள் போன்றவற்றை வாங்கலாம். மேலும் வேளாங்கன்னி பேராலயத்தில் 24 மணி நேர சேவை மையமும் உள்ளது. இதன் மூலம் பயணிகள் தேவையான சேவைகளைப் பெற முடியும்.