ராமகிருஷ்ணர் கோயில் அல்லது ராமகிருஷ்ணா மடம் என்று அழைக்கப்படும் இந்த மடாலயம் ஷீ ராமகிருஷ்ணர் பெயரில் ஆண்களுக்கென துவக்கப்பட்ட மடம் ஆகும். 19 ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ஹிந்து குருவாக அறியப்படும் இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவராவார். அவரது சிஷ்யரான ராமகிருஷ்ணானந்தாவால் இந்த சென்னை மடம் 1897ம் ஆண்டு திறக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மயிலாப்பூரில் ராமகிருஷ்ணா மடம் என்று அழைக்கப்படும் சாலையிலேயே இது அமைந்திருக்கிறது. இருப்பினும் துவக்கப்பட்ட காலத்தில் இந்த மடமானது மரீனா கடற்கரையை ஒட்டியுள்ள ஐஸ் ஹவுஸ் அல்லது விவேகானந்தர் இல்லம் எனப்படும் மாளிகையில்தான் துவங்கப்பட்டது.
விவேகானந்தர் தனது அமெரிக்க விஜயத்தை முடித்துவிட்டு திரும்பும்போது சென்னையில் இம்மாளிகையில் ஒரு வாரம் தங்கியிருந்துள்ளார். அதே மாளிகையில் அவரது வழிகாட்டுதலில் ராமகிருஷ்ணானந்தாவால் ராமகிருஷ்ணா மடம் திறக்கப்பட்டிருக்கிறது.
பின்னாளில் 1907ம் ஆண்டில் தற்போதைய மயிலாப்பூர் ஸ்தலத்துக்கு ராமகிருஷ்ணா மடம் இடம் மாற்றப்பட்டிருக்கிறது.
ராமகிருஷ்ண மடம் துவங்கப்பட்ட ‘ஐஸ் ஹவுஸ்’ மாளிகை தற்போது விவேகானந்தர் இல்லம் எனும் நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஹிந்து பாரம்பரியம் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓவியக்காட்சிகள், விவேகானந்தர் தொடர்புடைய புகைப்பட சேகரிப்புகள், விவேகானந்தர் தங்கியிருந்த அறை, விவேகானந்தர் நூல்களின் விற்பனைக்கூடம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், விவேகானந்தர் தொடர்புடைய பல உன்னதங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்குடன் புதிய நவீன திரைக்காட்சி அமைப்புகளும் சமீபத்தில் இங்கு சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.