கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 132 கிலோமீட்டர் தொலைவிலும், பீமேஸ்வரி மீன்பிடி முகாமிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது தொட்டம்கலி பகுதி. இந்தப் பகுதி காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருப்பதால் மீன் பிடிப்பது, பறவைகளை ரசிப்பது, சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது என்று சுற்றுலாப் பயணிகள் தங்கள் அலுத்தும் சலுத்தும் போன நகர வாழ்க்கையின் அருமருந்தாகவே தொட்டம்கலியை கருதுகின்றனர்.
தொட்டம்கலியில் நீர் வாழ் பறவைகள் முதல் நில வாழ் பறவைகள் வரை எண்ணற்ற பறவை இனங்கள் காணப்படுகின்றன. இங்கு நீங்கள் கருப்பு வயிற்று கடற்பறவை, விரலடிப்பான், சாம்பல் தலை மீன் கழுகு, பல வண்ண முகட்டுக் குயில், பழுப்பு கழுகு, பல வண்ண மீன்கொத்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அரிய பறவை இனங்களை நீங்கள் தொட்டம்கலியில் கண்டு ரசிக்கலாம்.
தொட்டம்கலியில் ஏற்பாடு செய்யப்படும் ஜங்கிள் சஃபாரியில் நீங்கள் காட்டுப்பன்றி, சாம்பார் மீன், புள்ளி மான், ராட்சஸ அணில், சிறுத்தை, யானை, மலபார் ராட்சஸ அணில், குள்ள நரி போன்ற விலங்குகளை ரசித்துப் பார்க்கலாம். அதோடு முதலைகள், ஆமைகள், பச்சோந்திகள், நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளையும் தொட்டம்கலியில் பார்க்கலாம்.
தொட்டம்கலி பகுதியில் காவிரி நதி தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு ஒரு குளம் போன்ற அமைப்பை உருவாக்குவதால் நீங்கள் இங்கு மீன் பிடித்து பொழுதுபோக்குவது இனிமையான அனுபவத்தை தரும்.
இங்கு மகாசீர் என்ற மீன் இனம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இப்பகுதியில் 'பிடித்து விடும்' முறை பின்பற்றப்படுவதால் அவற்றை பிடித்த பின் மீண்டும் ஆற்றில் விட்டு விடவேண்டும்.
தொட்டம்கலி பகுதியில் காவிரி ஆற்றின் சீற்றத்துக்கு எதிராக பரிசல் மற்றும் படகுப்பயணம் செல்வது, மவுண்டெயின் பைக்கிங், டிரெக்கிங் என்று சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது சாகசப் பயணிகளிடையே பிரபலமான பொழுதுபோக்குகளாக இருந்து வருகின்றன.
அதோடு தொட்டம்கலியின் காட்டுப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக வசித்து வரும் சோலிகா எனும் பழங்குடி மக்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
தொட்டம்கலியில் மீன் பிடிப்பது, பரிசல் பயணம் செல்வது, ஜங்கிள் சஃபாரி சென்று விலங்குகளை கண்டு ரசிப்பது என்று அத்தனையையும் முடித்துக் கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய இடம் தொன்மையான சிவன் கோயிலின் சிதைவுகள் இருக்கும் இடம்.
மேலும் தொட்டம்கலி பகுதிக்கு வெகு அருகாமையில் இருக்கும் பீமேஸ்வரி மீன்பிடி முகாம், சங்கமம் போன்ற பகுதிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.
பெங்களூரிலிருந்து மூன்று மணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கும் தொட்டம்கலி பகுதியை ஜூலை, ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மாதங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.