கட்டி சுப்பிரமணிய கோயில் பெங்களூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், தொட்டபல்லப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முன்னொரு காலத்தில் புனிதப் பயணம் வரும் யாத்ரிகர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியது. இப்போதும் இங்கு ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திரள் திரளாக வந்து வழிபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆலயத்தின் தனித்துவம்
சுப்பிரமணிய சாமியும், லக்ஷ்மி நாராயணனும் இக்கோயிலின் முதன்மை கடவுள்கள். இந்த கோயிலின் விக்ரகம் தனித்துவமான பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் கிழக்கு பார்த்தவாறு சுப்பிரமணிய சாமி சிலையும் , மேற்கு பார்த்தவாறு லக்ஷ்மி நாராயண சாமி சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய சாமி நேரடியாக காட்சி தர, மேற்கு பார்த்து காணப்படும் லக்ஷ்மி நாராயண சாமியை கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் மூலமே தரிசிக்க முடியும். இந்த வடிவமைப்பின் நேர்த்தி மிகவும் அலாதியானது. இந்த புதுமையை காணவும், திருவிழாக்களில் கலந்து கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வருவர்.
இந்த கோயிலை தவிர தொட்டபல்லப்பூர் நகரத்தில் வேறு சில கோயில்களும் இருக்கின்றன. கட்டி சுப்பிரமணிய கோயில் வரும் பயணிகள் அதன் அருகாமையில் உள்ள நந்திக் குன்றுக்கும் செல்லலாம்.
பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம்தான் கட்டி சுப்பிரமணிய கோயிலுக்கு அருகாமையில் உள்ள விமான நிலையமாகும். அதேபோல் மாகாளி துர்கா ரயில் நிலையம் கட்டி சுப்பிரமணிய கோயிலுக்கு வெகு அருகில் உள்ளது.
மேலும், பெங்களூரிலிருந்து தொட்டபல்லப்பூருக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால் தொட்டபல்லப்பூரை அடைந்தபின் பயணிகள் சுப்பிரமணிய கோயில் செல்வதற்கு வாடகை கார்களையோ, நகரப் பேருந்துகளையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.