பட்டு நகரம் என்று அழைக்கப்படும் ராமநகரம் பெங்களூரிலிரிந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ராமநகர மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கி வருகிறது. கர்நாடகாவின் மற்ற பகுதிகளை போலவே இதுவும் சோழ, மைசூர் மன்னர்களால் ஆளப்பட்ட நகரமே. எனினும் அமிதாப் பச்சன் நடித்த வெற்றிப் படமான ஷோலே இங்கு படம் பிடிக்கப்பட்ட பிறகுதான் ராமநகரம் புகழ் பெறத் ஆரம்பித்தது.
சிவராமகிரி, சோமகிரி, கிருஷ்ணகிரி, யாத்ர ஜாகிரி, ரெவென்ன சித்தேஸ்வரா, சிடிலக்கல்லு, ஜால சித்தேஸ்வரா ஆகிய ஏழு கம்பீரமான மலைக் குன்றுகளாலும் ராமநகரம் சூழப்பட்டுள்ளது.
ராமநகரத்தின் குன்றுகளில் காணப்படும் மஞ்சள் கழுத்து குயில்களும், நீண்ட மூக்கு கழுகுகளும் இயற்கை காதலர்களுக்கு காணக் கிடைக்காத காட்சியாக நிச்சயம் அமையும். கன்னட பாரம்பரிய கிராமிய கலைகளை பயிற்றுவித்து வரும் ஜனபத லோக்கா அமைப்பு ராமநகரத்தில் தான் இயங்கி வருகிறது.
ராமநகரத்தில் நெய்யப்படும் பட்டு சிறந்த தரத்துடன் விளங்குவதாலும், அதிக அளவில் பட்டு உற்பத்தி செய்யப்படுவதாலும் இதற்கு பட்டு நகரம் என்று பெயர் வந்தது. உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் பட்டுப் புடவை ராமநகரத்திலிருந்து பெறப்படும் பட்டிலிருந்தே செய்யப்படுகிறது.
ராமநகரம் பிரம்மாண்டமான மலைக் குன்றுகளால் சூழப்பட்டு, பெரிய பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதால் மலை ஏறுபவர்களுக்கு சிலுர்ப்ப்பூட்டும் சாகசப் பயணம் காத்திருக்கிறது.
ராமதேவரபெட்டா, தென்கிங்கல்பெட்டா உள்ளிட்ட மலை ஏறும் இடங்கள் 1960-ஆம் ஆண்டிலிருந்தே பிரபலமானவை. சில இடங்கள் பழமை காரணமாக வலிமையற்று காணப்படுவதால் அங்கு மட்டும் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.