ஜார்க்கண்ட் மாநிலம் பல்வேறு சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூமியாகவே சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. பல்வேறு துணிகர சாகச முயற்சிகளில் விருப்பமும் திறமும் உள்ளவர்கள் இங்கு அவற்றில் ஈடுபடலாம்.
கிரிதிஹ், பரஸ்நாத் மற்றும் சத்பஹார் மலைப்பகுதிகள் இந்த பொழுதுப்போக்குகளுக்கு ஏற்ற ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன. சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களை விரும்பும் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த மலைப்பகுதியை தேடி வருகின்றனர்.
பாராகிளைடிங், நீர் விளையாட்டுகள் மற்றும் பாராசெய்லிங் போன்றவை இங்கு பிரசித்தமான சாகச பொழுதுபோக்கு அம்சங்களாக பயணிகளை ஈர்த்துவருகின்றன.
கிரிதிஹ் மாவட்டத்தில் சுற்றுலா அம்சங்களில் நீர் விளையாட்டு பொழுதுபோக்குகள் முதன்மையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள கொண்டலி எனும் அணைத்தேக்கப்பகுதி இந்த வகையான பொழுதுபோக்குகளின் கேந்திரமாக அமைந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இங்கு பல்வேறு வகையான பறவையினங்களையும் பயணிகள் பார்த்து மகிழலாம். நீர் விளையாட்டுகள் மட்டுமல்லாது யானைச்சவார், ஒட்டகச்சவாரி போன்றவையும் இதர சுவாரசிய அனுபவங்களாக இங்கு காத்திருக்கின்றன.
விருப்பம் உள்ளவர்கள் படகுச்சவாரி, பாறையேற்றம் மற்றும் மிதவைப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம்.
‘ஹாட் ஏர் பலூன் ரைட்’ எனும் பலூன் சவாரியும் கிரிதிஹ் சுற்றுலாத்தலத்தில் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆரம்ப கால விமானப்பயண தொழில் நுட்பமாக விளங்கிய இந்த பலூன் பறப்பு தற்போது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்தப்படுகிறது.
நிபுணர்கள் அளிக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டலுடன் இந்த ‘பறக்கும் அனுபவத்தில்’ பயணிகள் ஈடுபடலாம். இருப்பினும் தங்களது மனோநிலை, உடல் நிலை போன்றவற்றில் கவனத்தில் கொண்டு இது போன்ற சாகச முயற்சிகளில் பயணிகள் ஈடுபடுவது சிறந்தது.
பாராசெயிலிங் எனும் மற்றொரு துணிகர சாகச பொழுதுபோக்கு இப்பகுதியில் பிரபல்யாக விளங்குகிறது. இங்கு சாகசப்பிரியர்கள் 300 அடி உயரத்தில் பாராசூட் பறப்பில் ஈடுபடலாம்.
நிலப்பகுதியில் ஒரு ஜீப் மூலமாகவோ, நீர்ப்பரப்பில் ஒரு மோட்டார் படகு மூலமாக பாராசூட் இழுத்துச்செல்லப்படுகிறது. அதில் அந்தரத்தில் தொங்கியபடி பயணிகள் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications